செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 80

நாம் ஒரு செயல் செய்வதற்கு ஒரு உந்துதல் இருக்கும். இதனைச் செய்தால், நமக்கு இந்த பயன் கிடைக்கும் என்று எண்ணி நாம் ஒரு செயலைச் செய்வோம். இவ்வாறான  உந்துதல் ஒவ்வொருவருக்கும் வேறு வேறாக இருக்கும். அப்படி பல வித உந்துதல்கள் இருப்பதால், அவை நமக்கு நன்மை பயக்கும் என்றாலும், நாம் செய்யும் செயலின் விளைவு நன்மை பயக்குமா? அவை  நம் உடல் நிலைக்கு, உள்ள நிலைக்கு உகந்ததா? இதோ இந்த நாலடியார்ப் பாடலில் பயன்கள் பலவாக இருந்தாலும் சில செயல்களை ஒதுக்கவேண்டும் என்கின்றார் இப்புலவர். அவை என்ன என்று பார்ப்போமா? 
 
நாலடியார் - 80.jpg

ஒருவர் தான் கெடுவதாக இருந்தாலும் அந்தக் கேட்டை நீக்கிக் கொள்வதற்காக சான்றோரின் கெடுதலை எண்ணக் கூடாது. பசியின் கொடுமையால் தன் உடம்பு வற்றி தசை கெட்டாலும், அறிவிற் கீழானவரிடம் உணவு பெற்று உண்ணக் கூடாது. வானத்தினால் சூழப்பட்ட இவ்வுலகமே நமக்கு கிடைக்கும் என்றாலும், பொய் கலந்த பேச்சினைப் பேசக் கூடாது.

ஒருவருக்கு கெடுதல் செய்வது என்பது நாம் அவருக்குக் கேடு விளைவிக்க எண்ணும் எண்ணத்திலேயே துவங்கிவிடுகிறது. இதனையே வள்ளுவப் பெருந்தகை

“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற

என்றார்.

“எண்ணம் போல் வாழ்வு" என்ற சொலவடையும் இதனைச் சார்ந்ததே.


பாடல்:
தான்கெடினும் தக்கார்கே டெண்ணற்க தன்உடம்பின்
ஊன்கெடினும் உண்ணார்கைத் துண்ணற்க - வான்கவிந்த
வையக மெல்லாம் பெறினும் உரையற்க
பொய்யோ டிடைமிடைந்த சொல்.

பதம் பிரித்த பாடல்:
தான் கெடினும், தக்கார் கேடு எண்ணற்க! தன் உடம்பின்
ஊன் கெடினும், உண்ணார் கைத்து உண்ணற்க! வான் கவிந்த
வையகம் எல்லாம் பெறினும், உரையற்க,
பொய்யோடு இடை மிடைந்த சொல்!

அருஞ்சொற்பொருள்:
மிடைந்த - கலந்த

புதன், 9 செப்டம்பர், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 79

எவை நன்றாக முடிகிறதோ அவை நன்றே (All is well that ends well) என்ற ஆங்கிலப் பொன் மொழியை நீங்கள்கேட்டிருக்கலாம். ஒரு செயலின் பயன் நன்மையில் முடியும் என்றால், அதன் வழி எவ்வழியானாலும் சரியா? நன்மையாஇல்லையா என்பது முடிவில் தான் தெரியும் என்றால், நன்மை கட்டாயம் வரும் என்பது உறுதியில்லை அல்லவா?அப்படியென்றால், செல்கின்ற வழியும் நல்லதாக இருக்க வேண்டாமா? ஒருவர் இன்பம் அடைவதற்கு பல வழிகள்இருக்கலாம். எந்த வழியைத் தேர்ந்தெடுப்பது? பாடலின் விளக்கத்தைப் பார்க்கலாம்.



ஓங்கி உயர்ந்த மலையில் இருந்து விழும் அருவிகளைக் கொண்ட நாட்டைச் சேர்ந்தவனே! இழிவு வந்தாலும் இன்பம்உண்டான காரணத்தால் அதன் பக்கம் இருக்கின்றவனே, இன்பம் தொடர்ந்து அமையும் என்றாலும், உலகம் பழிக்காதவழியில்லை என்றால் அது பயணிக்கத் தக்கது அல்ல. இன்பம் இல்லையென்றாலும், பழி இல்லாத பாதையே சிறந்த பாதை

பாடல்:
இன்பம் பயந்தாங் கிழிவு தலவைரினும்
இன்பத்தின் பக்கம் இருந்தைக்க - இன்பம்
ஒழியாமை கண்டாலும் ஓங்கருவி நாட !
பழியாகா ஆறே தலை.

பதம் பிரித்த பாடல்:
இன்பம் பயந்தாங்கு இழிவு தலைவரினும்,
இன்பத்தின் பக்கம் இருந்தைக்க! இன்பம்
ஒழியாமை கண்டாலும்-ஓங்கு அருவி நாட!-
பழி ஆகா ஆறே தலை.

அருஞ்சொற்பொருள்:
பயந்து - உண்டாகி
ஆறே - வழியே


திங்கள், 7 செப்டம்பர், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 78


ஒருவருக்குத் தாங்க முடியாத பசி. அந்தப் பசி எப்படி இருக்கிறது என்றால் ஆறாத வெந்நீர் எப்படிச் சுடுமோ அது போன்று தாங்க முடியாத பசி. அப்படிப் பசி இருக்கும் போது அவர் என்ன செய்ய வேண்டும்? யாரிடமாவது சொல்லலாமா? அப்படிச் சொல்வதென்றால் யாரிடம் சொல்வது? இவற்றுக்கு மிக அழகாக விடையளிக்கிறது இப்பாடல். 


ஆறாத வெந்நீர் சுடும்படி பசித்தாலும் ஒருவர் அதனைப் பொருத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், தங்களது இல்லாமையை தீர்க்க வல்ல நல்ல பண்பாளர்களிடம் உரைக்க வேண்டும். தங்களது குறையைக் களைய மனமற்ற பண்பு இல்லாதவரிடம், இல்லாமையைக் கூறாமல் இருப்பதே நல்லது.

பாடல்:
வற்றிமற் றாற்றப் பசிப்பினும் பண்பிலார்க்கு
அற்றம் அறிய உரையற்க - அற்றம்
மறைக்குந் துணையார்க் குரைப்பவே தம்மைத்
துறக்குந் துணிவிலா தார்.

பதம் பிரித்த பாடல்:
வற்றி, மற்று ஆற்றப் பசிப்பினும், பண்பு இலார்க்கு
அற்றம் அறிய உரையற்க! அற்றம்
மறைக்கும் துணையார்க்கு உரைப்பவே, தம்மைத்
துறக்கும் துணிவு இலாதார்.

அருஞ்சொற்பொருள்:
வற்றி - நீர் சுட வைக்கும் பொழுது வற்றுதல், பசியால் மெலிதல்
ஆற்ற - மிகுந்த
அற்றம் - இல்லாமை

புதன், 2 செப்டம்பர், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 77

அன்று இரவு தனது தோழியின் வீட்டில் கூட்டாஞ்சோறு. தான் சமைக்க நேரம் இல்லாத காரணத்தால் சாப்பிடத்தேவையான தட்டுகள் மற்றும் கரண்டிகளை வாங்கி வருவதாகச் சொல்லியிருந்தாள். அலுவலகத்தில் தன் குழுவில் இருக்கும் நிர்வாகிகளுடன் இருந்த சந்திப்பு முடிந்தவுடன், விரைவாகப் புறப்பட்டு, செல்லும் வழியில் ஒரு பலசரக்குகடையில் தட்டுகளையும் கரண்டிகளையும் வாங்கிச் சென்றாள். அவள் செல்வதற்கும், அனைவரும் சாப்பிடத்துவங்குவதற்கும் சரியாக இருந்தது. அந்த விருந்துக்கு மற்றவர்கள் வருவார்கள் என்று தெரியும். ஆனால் இவ்வளவு பேர்வருவார்கள் என்று அவள் நினைக்கவில்லை. அனைவரும் தனது தோழியிடம் மிகவும் நெருங்கி, அன்புடன் பழகும் நபர்கள்.அவர்களைப் பார்த்தவுடன் அவளுக்குள் ஒரு கேள்வி எழுந்தது.. இவ்வளவு நல்ல நண்பர்கள் தன் தோழிக்கு அமையக்காரணம் என்ன? ஒரு நிமிடம் கூட யோசிக்கவில்லை, அவளுக்கு விடை தெரிந்துவிட்டது. அவள் எண்ணத்தில் தோன்றிய விடை கீழ் வரும் நாலடியார்ப் பாடலில் அழகாக விளக்கப் படுகின்றது.



ஓல் என ஒலிக்கும் அருவியினைத் தழுவி நிற்கும் உயர்ந்த மலைகளை உடைய நாட்டில் வாழ்பவனே, நல்ல செயல்கள்செய்யும் ஒருவருக்கு நண்பர்கள் அமைவது அரிதாகுமோ? ஆகாது. ஏன் என்றால்,அவ்வாறு நல்லது செய்யும் பெரியோர்செய்யக் கூடாத செயல்களைச் செய்தாலும் நண்பர்கள் என்பதால் பொறுத்துக் கொள்வர். அதன் காரணமாக அவரின்நட்பினைப் பெற அவரை நாடி வரைவார்கள்.


பாடல்: 
பெரியார் பெருநட்புக் கோடல்தாம் செய்த
அரிய பொறுப்பஎன் றன்றோ - அரியரோ
ஒல்லென் அருவி உயர்வரை நன்னாட
நல்லசெய் வார்க்குத் தமர்.

பதம் பிரித்த பாடல்: 
பெரியார் பெரு நட்புக் கோடல், தாம் செய்த
அரிய பொறுப்ப என்று அன்றோ? அரியரோ-
ஒல்லென் அருவி உயர் வரை நல் நாட!-
நல்ல செய்வார்க்குத் தமர்?


அருஞ்சொற்பொருள்: 
கோடல் - கொள்ளுதல்
ஒல் - ஒல் என்ற சத்தத்தைக் குறிக்கும் சொல்
உயர் வரை - உயர்ந்த மலை
தமர் - நண்பர் 

செவ்வாய், 1 செப்டம்பர், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 76

நாம் ஒருவரிடம் நன்றாகப் பழகி விட்டோம். எப்பொழுதும் அவர் நன்றாக நம்மிடம் நடந்து கொள்கிறார். திடீரென்று ஒருநாள் அவர் நமக்கு இன்னல் விளைவிக்கும் செயலை செய்து விடுகிறார். அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்? அந்தஇனிமையற்ற செயலும் இனிய செயலாக மாறுவதற்கு வழி இருக்கிறதா? இருக்கின்றது என்று உணர்த்துகின்றது இந்தநாலடியார் பாடல்.



ஒருவர் இனிமையற்ற செயலைச் செய்தாலும், அது இனியதாக முடியும். எப்பொழுது இனியதாக முடியும்? நாம் அவர்செய்த இன்னலைப் பொறுத்துக் கொண்டு இருக்கும் பொழுது, அது இனியதாக முடியும். காடுகள் சூழ்ந்திருக்கும் நாட்டினில்வாழ்பவனே, நன்றாகப் பழகிவிட்டு ஒரு இனிமையற்ற செயலின் காரணமாக, நன்றாகப் பழகியவரிடம் இருந்து விலகுதல்என்பது விலங்குகளுக்கும் அரிய பண்பாகும். அப்படி இருக்கும் போது, மனிதர் அப்பண்பினைக் கடைப்பிடிக்கலாமா? கூடாது.

இங்கு நாம் அனைவரும் படித்த

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்

என்ற திருக்குறள் இதனுடன் ஒத்த கருத்துள்ளது. ஆனால், இந்த நாலடியாரைப் படித்தவுடன், இன்னலுக்குப் பின், அதனைப்பொறுத்துக் கொள்ளுதலும் நன்னயங்களில் ஒன்று என்று தோன்றுகிறது.


பாடல்:
இன்னா செயினும் இனிய ஒழிகென்று
தன்னையே தான்நோவின் அல்லது - துன்னிக்
கலந்தாரைக் கைவிடுதல் கானக நாட
விலங்கிற்கும் விள்ளல் அரிது.

பதம் பிரித்த பாடல்:
'இன்னா செயினும், இனிய ஒழிக! என்று,
தன்னையே தான் நோவின் அல்லது, துன்னிக்
கலந்தாரைக் கைவிடுதல்-கானக நாட!

விலங்கிற்கும் விள்ளல் அரிது!

அருஞ்சொற்பொருள்:
துன்னிக் கலந்தாரை - நெருங்கிப் பழகியவரை
விள்ளல் - பிரிதல்

திங்கள், 31 ஆகஸ்ட், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 75

அன்று நடந்த நிகழ்வினை அவனால் நம்ப முடியவில்லை. ஏன் தன் தோழன் அவ்வாறு நடந்து கொண்டான்? அவனுடன்இவ்வளவு நாள் நன்றாக நெருக்கமுடன் பழகியும் அந்த நிகழ்வுக்குக் காரணம் என்ன? இதனைப் பொறுத்துக் கொள்வதா?இல்லை அவனிடம் இதைப் பற்றிப் பேசுவதா? இதனைப் பற்றி பேசினால் பொறுமை இழந்து கோபத்தில் பேசக் கூடாதவார்த்தைகளைப் பேசிவிடுவோமோ? பல வினாக்கள் தன் மனதில் வலம் வர, விடை பகர வந்தது இந்த நாலடியார் பாடல்.



வேறுபாடு இல்லாமல் இருவர் நன்றாகக் கலந்து நட்புடன் பழகிய பின், சரியான செய்கை என்று சான்றோர்களால்போற்றப்படாத இழிவான செயலை ஒருவர் செய்ய நேர்ந்தால், மற்றவர் பொறுத்துக் கொள்ள முடிந்த வரையிலும்பொறுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றால், அந்தக் குற்றத்தைப் பலரும்தெரிந்துகொள்ளுமாறு பழித்துப் பேசாமல், அவரிடம் இருந்து விலகிச் செல்லுதலே நலம் பயக்கும் செயலாகும்.

பாடல்:
வேற்றுமை யின்றிக் கலந்திருவர் நட்டக்கால்
தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்
ஆற்றுந் துணையும் பொறுக்க பொறானாயின்
தூற்றாதே தூர விடல்.


பதம் பிரித்த பாடல்:
வேற்றுமை இன்றிக் கலந்து, இருவர் நட்டக்கால்,
தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்,
ஆற்றும் துணையும் பொறுக்க! பொறான் ஆயின்
தூற்றாதே, தூர விடல்!

அருஞ்சொற்பொருள்:
நட்டக்கால் - நேசித்தால்
தேற்றா - தகுதியற்ற
ஆற்றுந் துணையும் - முடித்த அளவும்
தூற்றாதே - பழிக்காதே
தூர விடல் - விலகிச் செல்லுதல்


ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 74

அன்று ஞாயிறு மதியம். மதிய உணவு உண்ட களைப்பில் அவன் சிறு தூக்கம் போட்டு எழுந்தான். மாலை வெயில் இதமாக வீசப் பூங்கா சென்று வரலாம் என்று புறப்பட்டான். பூங்காவில் அவன் நண்பனைச் சந்தித்து நலம் விசாரித்து உரையாடல்கள் தொடர்ந்தன. அப்பொழுது அவன் நண்பன் எதிர்பாராவிதமாக ஒரு கேள்வியைக் கேட்டான் “ வாழ்வில் துன்பம் அடையாமல் வாழ என்ன வழி?” “திடீரென்று இப்படிக் கேட்டால் என்ன சொல்ல, யோசித்துத் தான் சொல்ல வேண்டும்” என்று மெதுவாகக் கூறி கொஞ்சம் யோசிக்க நேரம் உண்டாக்கிக் கொண்டான். “இந்தக் கேள்விக்கு எப்படிப் பதில் சொல்வது? பல வித கோணங்களில் இதற்குப் பதில் சொல்லலாமே!” என்று யோசிக்கும் பொழுது சட்டென்று அவனுக்கு நினைவில் வந்தது இந்த நாலடியார் பாடல். உடனே அதன் பொருளைக் கூறி பின்பு பாடலையும் கூறினான்.



இவ்வுலகில் அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து கொண்டு, அவ்வாறு அறிந்து கொண்டாலும் அந்த அறிவினால் தலைக் கனம் கொள்ளாமல், அடக்கமாக இருந்து, இவ்வுலகில் பார்த்து அஞ்சுவதற்கு அஞ்சி, இந்த உலகம் இன்புறுமாறு செய்யத் தகுந்தவற்றைச் செய்து, தாம் பெறுகின்ற ஊதியத்தில் இன்புற்று வாழ்ந்தால், எந்த நாளும் துன்பம் இல்லாமல் வாழலாம்.


பாடல்:
அறிவ தறிந்தடங்கி அஞ்சுவ தஞ்சி
உறுவ துலகுவப்பச் செய்து - பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது.

பதம் பிரித்த பாடல்:
அறிவது அறிந்து, அடங்கி, அஞ்சுவது அஞ்சி,
உறுவது உலகு உவப்பச் செய்து, பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்புடையார், எஞ் ஞான்றும்,
துன்புற்று வாழ்தல் அரிது.

அருஞ்சொற்பொருள்:
உறுவது - பொருத்தமான அல்லது தகுந்த செயல்
பெறுவதனால் - தமக்கு கிடைத்த ஊதியம் கொண்டு

சனி, 29 ஆகஸ்ட், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 73

கடுஞ்சொல் எது? சொல்லப்படும் விடயம் நமக்கு அல்லது நம் மனதிற்கு ஏற்புடையதாக இல்லையென்றால் அது கடுஞ்சொல் ஆகுமா? நாம் கேட்க வேண்டும் என்று நாம் நினைப்பவற்றைக் கேட்பது இனிமையான சொல்லாகி விடுமா? கேட்பதற்குக் கடினமாக இருந்தாலும் ஒரு சொல் நல்ல சொல்லாக முடியுமா? கேட்பதற்கு இனிமையாக இருந்தும் ஒரு சொல் கடுஞ் சொல்லாகுமா? இவ்வினாக்களுக்கு விடை தருகின்றது இந்த நாலடியார் பாடல்.



பேரரும்புகள் தேனைக் கொண்டுள்ளதால், அவற்றைச் சுற்றி வண்டுகள் ஆர்ப்பரிக்க, வளம் பொருந்திய கடல் சூழ்ந்த, குளிர் காற்றுடன் நிலவும் கடற்கரையினைக் கொண்ட நாட்டின் தலைவனே! நல்ல அறிவுரை வழங்கும் சான்றோர் இருந்தால், அவ்வகைச் சான்றோர் தங்களின் உள்ளத்தில் உள்ள அன்பினால் நன்மை கருதி சொல்லும் சொல் கேட்பதற்குக் கொடிய சொல்லாக இருந்தாலும் தீயது ஆகாது. அன்பற்ற அயலவர் சொல்லும் சொல் கேட்பதற்கு இனிமையான சொல்லாக இருந்தாலும் அது தீயதாகும். கொடிய சொல், இனிய சொல் என்பது அந்தச் சொல் எதற்காகச் சொல்லப்பட்டது என்றுணர்ந்து, நன்மை பயக்கவேண்டும் என்பதற்காக அறிவுடையோர் சொல்லும் கடுஞ்சொல்லைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

பாடல்:
காதலாற் சொல்லுங் கடுஞ்சொல் உவந்துரைக்கும்
ஏதிலார் இன்சொலின் தீதாமோ - போதெலாம்
மாதர்வண்டு ஆர்க்கும் மலிகடல் தண்சேர்ப்ப !
ஆவ தறிவார்ப் பெறின்.

பதம் பிரித்த பாடல்:
காதலார் சொல்லும் கடுஞ் சொல், உவந்து உரைக்கும்
ஏதிலார் இன் சொலின் தீது ஆமோ-போது எலாம்
மாதர் வண்டு ஆர்க்கும் மலி கடல் தண் சேர்ப்ப!-
ஆவது அறிவார்ப் பெறின்?

அருஞ்சொற்பொருள்:
ஏதிலார் - அயலவர், அன்பும் பகைமையும் இல்லாதவர்
மலி - மிகுந்து
தண் - குளிர்ச்சி

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 72

இவ்வுலகில் மனிதர் ஒருவரோடு ஒருவர் நல்லிணக்கம் கொண்டு வாழ நாம் என்ன செய்ய வேண்டும்? அதற்கான நல் வழி எது? தவிர்க்கப் பட வேண்டிய வழி எது? அவ்வாறு வழிதனை வரையறுக்கும்போது இழிவான செயல் என்று எதனைக் குறிப்பிடுகின்றனர்? இதோ இந்த நாலடியார் பாடல் இதனை அழகாக விளக்குகிறது.



அறிவு நிலையில் ஒருவருக்கு நிகரில்லாதவர், நற்குணம் அற்ற சொற்களைக் கூறும்போது, அறிவில் சிறந்த சாண்றோர் என்ன செய்ய வேண்டும்? தகுதி அறிவற்றவர் கூறிய சொற்களைப் பொறுத்துக் கொள்ளுதல் தான் அந்தச் சான்றோருக்கு உரிய தகுதி ஆகும். அவ்வாறு பொறுத்துக் கொள்ளவில்லை என்றால், ஒருவர் சாண்றோராக இருந்தாலும், நீர் சூழ்ந்த நிலப்பரப்பைக் கொண்ட இவ்வுலகம், அவ்வாறான குணத்தைப் புகழுக்கு ஏற்றது இல்லை என்று கூறும். அத்துடன் அந்தக் குணம் பழிப்பதற்கு ஏற்ற இழிகுணம் என்றும் கருதி விடும்.

பாடல்:

நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால் மற்றது
தாரித் திருத்தல் தகுதிமற் -றோரும்
புகழ்மையாக் கொள்ளாது பொங்குநீர் ஞாலம்
சமழ்மையாக் கொண்டு விடும்

பதம் பிரித்த பாடல்:

நேர் அல்லார் நீர் அல்ல சொல்லியக்கால், மற்று அது
தாரித்திருத்தல் தகுதி; மற்று ஓரும்
புகழ்மையாக் கொள்ளாது, பொங்கு நீர் ஞாலம்
சமழ்மையாக் கொண்டுவிடும்.

அருஞ்சொற்பொருள்:

தாரித்து இருத்தல் - பொறுத்துக் கொள்ளுதல்
சமழ்மை - இழிகுணம்

வியாழன், 27 ஆகஸ்ட், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 71

எப்பொழுதும் அவன் யாருடன் பேசுகிறோம் என்று சிந்தித்துத் தான் பேசுவான். அன்றைக்குப் பூங்காவில் நடந்து முடித்த பிறகு, நெருங்கிப் பழகாத ஒருவரிடம் பேசத் துவங்கினான். சிறிது நேரம் சென்ற பின் தான் அவன் செய்த தவறு அவனுக்குப் புரிந்தது. அவன் பேசத் துவங்கிய உடன் அந்த நபர் இழிவான சொற்களையும், இழிவான செயல்களைப் பற்றியும் பேசத் தொடங்கினார். அடடா, நாம் சிறு வயதில் படித்த நாலடியார் பாடலின் வழி நடந்திருந்தால் இவ்வாறு நடந்திருக்காதே என்று எண்ணினான். 




இதோ அந்தப் பாடலின் பொருள்: மலையினை மாலை போன்று அருவி தழுவியதால் குளிர் அடைந்த மலையினைக் கொண்ட நாட்டைச் சார்ந்தவரே, அறிவில்லாத நபரிடம் பேசுவதைத் தவிர்க்கவும். அறிவில்லாதவரிடம் பேசினால் அவர் முறை தவறி எதிர்த்துப் பேசுவார். அதனால் முடிந்த வரை, அறிவில்லாதவரிடம் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது.


பாடல்:
கோதை யருவிக் குளிர்வரை நன்னாட
பேதையோ டியாதும் உரையற்க - பேதை
உரைப்பிற் சிதைந்துரைக்கும் வகையான்
வழுக்கிக் கழிதலே நன்று.

பதம் பிரித்த பாடல்:

கோதை அருவிக் குளிர் வரை நல் நாட!
பேதையோடு யாதும் உரையற்க! பேதை,
உரைக்கின், சிதைந்து உரைக்கும்; ஒல்லும் வகையான்
வழுக்கிக் கழிதலே நன்று

அருஞ்சொற்பொருள்:

கோதை - பூமாலை
சிதைந்து - முறை தவறி
ஒல்லும் வகையான் - முடிந்த வழிகளில்

கழிதல் - தவிர்த்தல்