திங்கள், 31 ஆகஸ்ட், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 75

அன்று நடந்த நிகழ்வினை அவனால் நம்ப முடியவில்லை. ஏன் தன் தோழன் அவ்வாறு நடந்து கொண்டான்? அவனுடன்இவ்வளவு நாள் நன்றாக நெருக்கமுடன் பழகியும் அந்த நிகழ்வுக்குக் காரணம் என்ன? இதனைப் பொறுத்துக் கொள்வதா?இல்லை அவனிடம் இதைப் பற்றிப் பேசுவதா? இதனைப் பற்றி பேசினால் பொறுமை இழந்து கோபத்தில் பேசக் கூடாதவார்த்தைகளைப் பேசிவிடுவோமோ? பல வினாக்கள் தன் மனதில் வலம் வர, விடை பகர வந்தது இந்த நாலடியார் பாடல்.



வேறுபாடு இல்லாமல் இருவர் நன்றாகக் கலந்து நட்புடன் பழகிய பின், சரியான செய்கை என்று சான்றோர்களால்போற்றப்படாத இழிவான செயலை ஒருவர் செய்ய நேர்ந்தால், மற்றவர் பொறுத்துக் கொள்ள முடிந்த வரையிலும்பொறுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றால், அந்தக் குற்றத்தைப் பலரும்தெரிந்துகொள்ளுமாறு பழித்துப் பேசாமல், அவரிடம் இருந்து விலகிச் செல்லுதலே நலம் பயக்கும் செயலாகும்.

பாடல்:
வேற்றுமை யின்றிக் கலந்திருவர் நட்டக்கால்
தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்
ஆற்றுந் துணையும் பொறுக்க பொறானாயின்
தூற்றாதே தூர விடல்.


பதம் பிரித்த பாடல்:
வேற்றுமை இன்றிக் கலந்து, இருவர் நட்டக்கால்,
தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்,
ஆற்றும் துணையும் பொறுக்க! பொறான் ஆயின்
தூற்றாதே, தூர விடல்!

அருஞ்சொற்பொருள்:
நட்டக்கால் - நேசித்தால்
தேற்றா - தகுதியற்ற
ஆற்றுந் துணையும் - முடித்த அளவும்
தூற்றாதே - பழிக்காதே
தூர விடல் - விலகிச் செல்லுதல்


ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 74

அன்று ஞாயிறு மதியம். மதிய உணவு உண்ட களைப்பில் அவன் சிறு தூக்கம் போட்டு எழுந்தான். மாலை வெயில் இதமாக வீசப் பூங்கா சென்று வரலாம் என்று புறப்பட்டான். பூங்காவில் அவன் நண்பனைச் சந்தித்து நலம் விசாரித்து உரையாடல்கள் தொடர்ந்தன. அப்பொழுது அவன் நண்பன் எதிர்பாராவிதமாக ஒரு கேள்வியைக் கேட்டான் “ வாழ்வில் துன்பம் அடையாமல் வாழ என்ன வழி?” “திடீரென்று இப்படிக் கேட்டால் என்ன சொல்ல, யோசித்துத் தான் சொல்ல வேண்டும்” என்று மெதுவாகக் கூறி கொஞ்சம் யோசிக்க நேரம் உண்டாக்கிக் கொண்டான். “இந்தக் கேள்விக்கு எப்படிப் பதில் சொல்வது? பல வித கோணங்களில் இதற்குப் பதில் சொல்லலாமே!” என்று யோசிக்கும் பொழுது சட்டென்று அவனுக்கு நினைவில் வந்தது இந்த நாலடியார் பாடல். உடனே அதன் பொருளைக் கூறி பின்பு பாடலையும் கூறினான்.



இவ்வுலகில் அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து கொண்டு, அவ்வாறு அறிந்து கொண்டாலும் அந்த அறிவினால் தலைக் கனம் கொள்ளாமல், அடக்கமாக இருந்து, இவ்வுலகில் பார்த்து அஞ்சுவதற்கு அஞ்சி, இந்த உலகம் இன்புறுமாறு செய்யத் தகுந்தவற்றைச் செய்து, தாம் பெறுகின்ற ஊதியத்தில் இன்புற்று வாழ்ந்தால், எந்த நாளும் துன்பம் இல்லாமல் வாழலாம்.


பாடல்:
அறிவ தறிந்தடங்கி அஞ்சுவ தஞ்சி
உறுவ துலகுவப்பச் செய்து - பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது.

பதம் பிரித்த பாடல்:
அறிவது அறிந்து, அடங்கி, அஞ்சுவது அஞ்சி,
உறுவது உலகு உவப்பச் செய்து, பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்புடையார், எஞ் ஞான்றும்,
துன்புற்று வாழ்தல் அரிது.

அருஞ்சொற்பொருள்:
உறுவது - பொருத்தமான அல்லது தகுந்த செயல்
பெறுவதனால் - தமக்கு கிடைத்த ஊதியம் கொண்டு

சனி, 29 ஆகஸ்ட், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 73

கடுஞ்சொல் எது? சொல்லப்படும் விடயம் நமக்கு அல்லது நம் மனதிற்கு ஏற்புடையதாக இல்லையென்றால் அது கடுஞ்சொல் ஆகுமா? நாம் கேட்க வேண்டும் என்று நாம் நினைப்பவற்றைக் கேட்பது இனிமையான சொல்லாகி விடுமா? கேட்பதற்குக் கடினமாக இருந்தாலும் ஒரு சொல் நல்ல சொல்லாக முடியுமா? கேட்பதற்கு இனிமையாக இருந்தும் ஒரு சொல் கடுஞ் சொல்லாகுமா? இவ்வினாக்களுக்கு விடை தருகின்றது இந்த நாலடியார் பாடல்.



பேரரும்புகள் தேனைக் கொண்டுள்ளதால், அவற்றைச் சுற்றி வண்டுகள் ஆர்ப்பரிக்க, வளம் பொருந்திய கடல் சூழ்ந்த, குளிர் காற்றுடன் நிலவும் கடற்கரையினைக் கொண்ட நாட்டின் தலைவனே! நல்ல அறிவுரை வழங்கும் சான்றோர் இருந்தால், அவ்வகைச் சான்றோர் தங்களின் உள்ளத்தில் உள்ள அன்பினால் நன்மை கருதி சொல்லும் சொல் கேட்பதற்குக் கொடிய சொல்லாக இருந்தாலும் தீயது ஆகாது. அன்பற்ற அயலவர் சொல்லும் சொல் கேட்பதற்கு இனிமையான சொல்லாக இருந்தாலும் அது தீயதாகும். கொடிய சொல், இனிய சொல் என்பது அந்தச் சொல் எதற்காகச் சொல்லப்பட்டது என்றுணர்ந்து, நன்மை பயக்கவேண்டும் என்பதற்காக அறிவுடையோர் சொல்லும் கடுஞ்சொல்லைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

பாடல்:
காதலாற் சொல்லுங் கடுஞ்சொல் உவந்துரைக்கும்
ஏதிலார் இன்சொலின் தீதாமோ - போதெலாம்
மாதர்வண்டு ஆர்க்கும் மலிகடல் தண்சேர்ப்ப !
ஆவ தறிவார்ப் பெறின்.

பதம் பிரித்த பாடல்:
காதலார் சொல்லும் கடுஞ் சொல், உவந்து உரைக்கும்
ஏதிலார் இன் சொலின் தீது ஆமோ-போது எலாம்
மாதர் வண்டு ஆர்க்கும் மலி கடல் தண் சேர்ப்ப!-
ஆவது அறிவார்ப் பெறின்?

அருஞ்சொற்பொருள்:
ஏதிலார் - அயலவர், அன்பும் பகைமையும் இல்லாதவர்
மலி - மிகுந்து
தண் - குளிர்ச்சி

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 72

இவ்வுலகில் மனிதர் ஒருவரோடு ஒருவர் நல்லிணக்கம் கொண்டு வாழ நாம் என்ன செய்ய வேண்டும்? அதற்கான நல் வழி எது? தவிர்க்கப் பட வேண்டிய வழி எது? அவ்வாறு வழிதனை வரையறுக்கும்போது இழிவான செயல் என்று எதனைக் குறிப்பிடுகின்றனர்? இதோ இந்த நாலடியார் பாடல் இதனை அழகாக விளக்குகிறது.



அறிவு நிலையில் ஒருவருக்கு நிகரில்லாதவர், நற்குணம் அற்ற சொற்களைக் கூறும்போது, அறிவில் சிறந்த சாண்றோர் என்ன செய்ய வேண்டும்? தகுதி அறிவற்றவர் கூறிய சொற்களைப் பொறுத்துக் கொள்ளுதல் தான் அந்தச் சான்றோருக்கு உரிய தகுதி ஆகும். அவ்வாறு பொறுத்துக் கொள்ளவில்லை என்றால், ஒருவர் சாண்றோராக இருந்தாலும், நீர் சூழ்ந்த நிலப்பரப்பைக் கொண்ட இவ்வுலகம், அவ்வாறான குணத்தைப் புகழுக்கு ஏற்றது இல்லை என்று கூறும். அத்துடன் அந்தக் குணம் பழிப்பதற்கு ஏற்ற இழிகுணம் என்றும் கருதி விடும்.

பாடல்:

நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால் மற்றது
தாரித் திருத்தல் தகுதிமற் -றோரும்
புகழ்மையாக் கொள்ளாது பொங்குநீர் ஞாலம்
சமழ்மையாக் கொண்டு விடும்

பதம் பிரித்த பாடல்:

நேர் அல்லார் நீர் அல்ல சொல்லியக்கால், மற்று அது
தாரித்திருத்தல் தகுதி; மற்று ஓரும்
புகழ்மையாக் கொள்ளாது, பொங்கு நீர் ஞாலம்
சமழ்மையாக் கொண்டுவிடும்.

அருஞ்சொற்பொருள்:

தாரித்து இருத்தல் - பொறுத்துக் கொள்ளுதல்
சமழ்மை - இழிகுணம்

வியாழன், 27 ஆகஸ்ட், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 71

எப்பொழுதும் அவன் யாருடன் பேசுகிறோம் என்று சிந்தித்துத் தான் பேசுவான். அன்றைக்குப் பூங்காவில் நடந்து முடித்த பிறகு, நெருங்கிப் பழகாத ஒருவரிடம் பேசத் துவங்கினான். சிறிது நேரம் சென்ற பின் தான் அவன் செய்த தவறு அவனுக்குப் புரிந்தது. அவன் பேசத் துவங்கிய உடன் அந்த நபர் இழிவான சொற்களையும், இழிவான செயல்களைப் பற்றியும் பேசத் தொடங்கினார். அடடா, நாம் சிறு வயதில் படித்த நாலடியார் பாடலின் வழி நடந்திருந்தால் இவ்வாறு நடந்திருக்காதே என்று எண்ணினான். 




இதோ அந்தப் பாடலின் பொருள்: மலையினை மாலை போன்று அருவி தழுவியதால் குளிர் அடைந்த மலையினைக் கொண்ட நாட்டைச் சார்ந்தவரே, அறிவில்லாத நபரிடம் பேசுவதைத் தவிர்க்கவும். அறிவில்லாதவரிடம் பேசினால் அவர் முறை தவறி எதிர்த்துப் பேசுவார். அதனால் முடிந்த வரை, அறிவில்லாதவரிடம் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது.


பாடல்:
கோதை யருவிக் குளிர்வரை நன்னாட
பேதையோ டியாதும் உரையற்க - பேதை
உரைப்பிற் சிதைந்துரைக்கும் வகையான்
வழுக்கிக் கழிதலே நன்று.

பதம் பிரித்த பாடல்:

கோதை அருவிக் குளிர் வரை நல் நாட!
பேதையோடு யாதும் உரையற்க! பேதை,
உரைக்கின், சிதைந்து உரைக்கும்; ஒல்லும் வகையான்
வழுக்கிக் கழிதலே நன்று

அருஞ்சொற்பொருள்:

கோதை - பூமாலை
சிதைந்து - முறை தவறி
ஒல்லும் வகையான் - முடிந்த வழிகளில்

கழிதல் - தவிர்த்தல்