செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 80

நாம் ஒரு செயல் செய்வதற்கு ஒரு உந்துதல் இருக்கும். இதனைச் செய்தால், நமக்கு இந்த பயன் கிடைக்கும் என்று எண்ணி நாம் ஒரு செயலைச் செய்வோம். இவ்வாறான  உந்துதல் ஒவ்வொருவருக்கும் வேறு வேறாக இருக்கும். அப்படி பல வித உந்துதல்கள் இருப்பதால், அவை நமக்கு நன்மை பயக்கும் என்றாலும், நாம் செய்யும் செயலின் விளைவு நன்மை பயக்குமா? அவை  நம் உடல் நிலைக்கு, உள்ள நிலைக்கு உகந்ததா? இதோ இந்த நாலடியார்ப் பாடலில் பயன்கள் பலவாக இருந்தாலும் சில செயல்களை ஒதுக்கவேண்டும் என்கின்றார் இப்புலவர். அவை என்ன என்று பார்ப்போமா? 
 
நாலடியார் - 80.jpg

ஒருவர் தான் கெடுவதாக இருந்தாலும் அந்தக் கேட்டை நீக்கிக் கொள்வதற்காக சான்றோரின் கெடுதலை எண்ணக் கூடாது. பசியின் கொடுமையால் தன் உடம்பு வற்றி தசை கெட்டாலும், அறிவிற் கீழானவரிடம் உணவு பெற்று உண்ணக் கூடாது. வானத்தினால் சூழப்பட்ட இவ்வுலகமே நமக்கு கிடைக்கும் என்றாலும், பொய் கலந்த பேச்சினைப் பேசக் கூடாது.

ஒருவருக்கு கெடுதல் செய்வது என்பது நாம் அவருக்குக் கேடு விளைவிக்க எண்ணும் எண்ணத்திலேயே துவங்கிவிடுகிறது. இதனையே வள்ளுவப் பெருந்தகை

“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற

என்றார்.

“எண்ணம் போல் வாழ்வு" என்ற சொலவடையும் இதனைச் சார்ந்ததே.


பாடல்:
தான்கெடினும் தக்கார்கே டெண்ணற்க தன்உடம்பின்
ஊன்கெடினும் உண்ணார்கைத் துண்ணற்க - வான்கவிந்த
வையக மெல்லாம் பெறினும் உரையற்க
பொய்யோ டிடைமிடைந்த சொல்.

பதம் பிரித்த பாடல்:
தான் கெடினும், தக்கார் கேடு எண்ணற்க! தன் உடம்பின்
ஊன் கெடினும், உண்ணார் கைத்து உண்ணற்க! வான் கவிந்த
வையகம் எல்லாம் பெறினும், உரையற்க,
பொய்யோடு இடை மிடைந்த சொல்!

அருஞ்சொற்பொருள்:
மிடைந்த - கலந்த