புதன், 17 ஜூன், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 68

அலுவலகத்தில் அன்றைய தினம் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு பரபரப்பாக அலுவல்கள் நடந்து கொண்டிருந்தன. ஓர் அறையில் ஒரு கூட்டத்தை முடித்து வெளிவரும்பொழுது தான், அவன் அந்தக் காட்சியைப் பார்த்தான். நிறுவனத்தின் உபதலைவர் ஒரு தொழிலாளியிடம் கார சாரமாக பேசிக் கொண்டிருந்தார். எப்பொழுதும் அமைதியாகத்தானே இருப்பார் என்று மனதில் நினைத்துக் கொண்டு அவன் தன் அறையினுள் நுழைந்தான். சில நிமிடங்கள் கழித்து தேநீர் அருந்தச் செல்லும் பொழுது, கோபத்துடன் பேசிய உபதலைவர் அந்த தொழிலாளியிடம் மிகவும் கனிவாக பேசிக் கொண்டிருந்தார். அதனைப் பார்த்த அவனுக்கு நினைவில் வந்தது இந்த நாலடியார்ப் பாடல்.



நீர் பொதுவாக எப்பொழுதும் தண்மை கொண்டது. அதனால் தான் தண்ணீர் என்கின்றோம். அந்த நீர் சுட வைக்கும் பொழுது தண்மை நீங்கி, சூடேறி, வெந்நீர் ஆக மாறும். அவ்வாறு மாறிய வெந்நீர் சிறிது நேரம் கழித்து, சூடு இறங்கி தண்ணீராக மாறிவிடும். அது போல அறிவிற் சிறந்த சான்றோர், ஏதோவொரு காரணத்திற்காக கோபம் கொண்டாலும், அந்த கோபம் சிறிது நேரத்தில் தணிந்து விடும். ஆனால், அறிவில் கீழானவர், கோபம் அடைந்தார்கள் என்றால், அவர்கள் எவ்வளவு நாட்கள் ஆனாலும், அவர்கள் கோபம் தீராது.

கோபம் வருவது மனிதற்கு இயல்பான பண்பு, அதனை எவ்வாறு கையாளுகிறோம் என்பதை வைத்து அவர் அறிவிற் சிறந்த சான்றோரா இல்லையா என்று தெரிய வரும்.

பாடல்:

நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி
கெடுங்காலம் இன்றிப் பரக்கும் - அடுங்காலை
நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே
சீர்கொண்ட சான்றோர் சினம்.

பதம் பிரித்த பாடல்:

நெடுங் காலம் ஓடினும், நீசர் வெகுளி
கெடும் காலம் இன்றிப் பரக்கும்; அடும் காலை
நீர் கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே
சீர் கொண்ட சான்றோர் சினம்.

அருஞ்சொற்பொருள்:

நீசர் - அறிவில் குறைந்த கீழானவர்
பரக்கும் - பெருகும்
அடும் - சுடும்


நாளும் ஒரு நாலடியார் : பாடல் 67

ஒருவர் ஒரு செயலை செய்யத் தக்கவர் என்று எப்பொழுது மதிக்கப் படுவார்? அவர் ஒரு செயலை செய்ய முடியாதவர் என்று எப்பொழுது மதிக்கப் படுவார்? செய்யப் படும் செயலின் தன்மைக்கும் இவ்வாறு மதிப்பிடப் படுவதற்கும் தொடர்பு உண்டா? நன்மையை உண்டாக்கும் செயலுக்கும் தீமையை உண்டாக்கும் செயலுக்கும் வேறுபாடு உண்டா? இருக்கின்றது என்கின்றது இந்த நாலடியார்ப் பாடல்.



ஒருவர் நம் முன் பகைமையை வெளிப்படுத்தி நடந்துகொள்ளும் பொழுது, ஒருவர் அவரிடம் பகைமை பாராட்டவில்லை என்றால் அதனை இயலாமை என்று அறிவில் சிறந்த பெரியோர் கூற மாட்டார்கள். எனவே, ஒருவர் தம் பகையைக் கட்டுப் படுத்தாமல், துன்பம் விளைவிக்கக் கூடிய செயல்களைச் செய்தால், நாம் அவருக்கு திருப்பி துன்பங்கள் செய்யாமல் இருப்பது நல்லது.

இதனைத் தான் திருவள்ளுவர்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்துவிடல்

என்று கூறுகின்றார்.



பாடல்: 

மாற்றாராய் நின்றுதம் மாறேற்பார்க் கேலாமை
ஆற்றாமை என்னார் அறிவுடையார் - ஆற்றாமை
நேர்த்தின்னா மற்றவர் செய்தக்கால் தாம் அவரைப்
பேர்த்தின்னா செய்யாமை நன்று.

பதம் பிரித்த பாடல்: 

மாற்றாராய் நின்று, தம் மாறு ஏற்பார்க்கு ஏலாமை,
'ஆற்றாமை' என்னார், அறிவுடையார்; ஆற்றாமை
நேர்த்து, இன்னா மற்று அவர் செய்தக்கால், தாம் அவரைப்
பேர்த்து இன்னா செய்யாமை நன்று.

அருஞ்சொற்பொருள்:

மாற்றாராய் - பகைவராய்
மாறு - பகைமை
ஏலாமை - செய்யாமை
ஆற்றாமை - இயலாமை
பேர்த்து - திருப்பி

ஞாயிறு, 14 ஜூன், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 66

வார இறுதியினை இயற்கையோடு செலவிடலாம் என்று அவள் நினைத்து, காணகத்தில் தங்குவதற்குத் தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு அவள் தன் மகிழுந்துவில் பயணிக்கத் துவங்கினாள். ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பின் தங்க வேண்டிய இடம் வந்தடைந்தாள். தங்கும் கொட்டகையை நிலத்தில் பதித்த பின், கோடை கால இள வெயிலில் தென்றல் காற்று இதமாக வருட ஒரு சுற்று நடக்கத் துவங்கினாள். காட்டிற்குள் சென்ற அவள், அதன் உட்புதரில் நாகம் ஒன்றைக் கண்டாள். அந்த நாகம் அமைதியாக இருந்தது. அதே நாகம் சீற்றம் கொண்டால் எவ்வாறு இருக்கும் என்று நினைத்துப் பார்த்தாள். அப்பொழுது சீற்றம் இல்லாத அமைதியான நாகம் உவமையாக பயன்படுத்தப் பட்ட நாலடியார்ப் பாடல் அவள் மனதினில் வலம் வந்தது.



சீறி வரும் நாகம் மந்திரிக்கப் பட்ட திருநீற்றால் அமைதியடையும் என்ற நம்பிக்கை இருந்தது. அவ்வாறு இருக்கும் நாகம் எப்படி அமைதியாக இருக்குமோ, அது போன்று குணத்தில் பெரியோர், தங்களது குலப் பெருமை கருதி, குணத்தில் தாழ்ந்து இருக்கும் கயவர் தீமையான சொற்களை, தங்கள் மீது கற்கள் எறிவது போல், எல்லோர் முன்னிலையில் பேசினாலும், அவர்கள் பொறுமையாக இருப்பர்.

பாடல்:
கல்லெறிந் தன்ன கயவர்வாய் இன்னாச்சொல்
எல்லாருங் காணப் பொறுத்துய்ப்பர் - ஒல்லை
இடுநீற்றால் பைஅவிந்த நாகம்போல் தத்தம்
குடிமையான் வாதிக்கப் பட்டு.

பதம் பிரித்த பாடல்:
கல் எறிந்தன்ன கயவர் வாய் இன்னாச் சொல்
எல்லாரும் காணப் பொறுத்து, உய்ப்பர்-ஒல்லை,
இடு நீற்றால் பை அவிந்த நாகம்போல், தம்தம்
குடிமையான் வாதிக்கப்பட்டு.

அருஞ்சொற்பொருள்:
ஒல்லை - விரைவாக
பை அவிந்த - படம் சுருங்கி சினம் அடங்கிய
வாதிக்கப் பட்டு - தடை செய்யப் பட்டு

வியாழன், 30 ஏப்ரல், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 65

பொறுமையினை வரையருக்க வரும் இப்பாடல் புலன் அடக்கத்தில் துவங்குகிறது. ஒருவர்,  இளமைக் காலத்தில் தங்களின் ஐந்து புலன்களுக்கும்  மிக எளிதாக அடிமைப் பட்டு விடுவர். அவரே முதியவராகும் பொழுது புலனடக்கம் என்பது எளிதாகின்றது. ஆனால், உண்மையான புலனடக்கம் என்பது ஒருவர் இளையவராக இருக்கும் பொழுது அடக்குவதே என்று விவரிக்கிறது இப்பாடல்.

கொடை என்பது யாது? ஒருவரிடம் பொருள் குறைந்து இருக்கும் நிலையில், அவர் மற்றவருக்கு உதவி செய்வாரானால், அதுவே கொடை எனப்படும் என்று விளக்குகின்றது இந்தப் பாடல். இருக்கும் பொழுது கொடுப்பது எளிது. இல்லாமையில் வாடும் பொழுது ஈகை செய்யும் மனிதரே கொடை குணம் கொண்டவர்.



இதே போன்று, அனைவரையும் அடக்கி ஆள்கின்ற வலிமை உடைய ஒருவர், அவ்வாறு செய்யாமல், தனது வலிமையினை அடக்கி சினம் கொள்ளாமல், பொறுமையாக இருப்பார்களானால், அவரே பொறுமையினை கடைபிடிப்பவர். அந்த வலிமை உடல் வலிமையாக இருக்கலாம். அறிவின் வழி வரும் வலிமையாகவும் இருக்கலாம்.  

இப்பாடலைப் படிக்கும் பொழுது “பதவி வரும் போது, பணிவு வரவேண்டும் தோழா” என்ற கவிஞர் வாலி வரகுளின் வரிகள் நினைவுக்கு வருகிறது.

பாடல்:
இளையான் அடக்கம் அடக்கம் கிளைபொருள்
இல்லான் கொடையே கொடைப்பயன் - எல்லாம்
ஒறுக்கும் மதுகை உரனுடை யாளன்
பொறுக்கும் பொறையே பொறை.

பதம் பிரித்த பாடல்:
இளையான் அடக்கம் அடக்கம்; கிளை பொருள்
இல்லான் கொடையே கொடைப் பயன்; எல்லாம்
ஒறுக்கும் மதுகை உரனுடையாளன்
பொறுக்கும் பொறையே பொறை.

அருஞ்சொற்பொருள்:
ஒறுக்கும் - அடக்கியாள்கின்ற
மதுகை - வலிமை
உறனுடயாளன் - உடையவன்
பொறை - பொறுமை

திங்கள், 27 ஏப்ரல், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 64

சான்றோரை மேன் மக்கள் என்றும் சான்றோர் அல்லாதவரை கீழ் மக்கள் என்று சொல்வர் நம் முன்னோர். சான்றோராரை நாம் எவ்வாறு கண்டு பிடிப்பது? இதற்கு பல விடைகள், பல விளக்கங்கள் உண்டு நம் பழம்பெரும் தமிழிலக்கியத்தில். தன் அறிவுக்கு நிகரில்லா ஒருவர்  தாழ்வாக மற்றொருவரை இகழ்ந்து பேசும்போது, அந்த மற்றொருவர் எவ்வாறு நடந்து கொள்வார்? இதனை வைத்து ஒருவர் கற்றறிந்த சான்றோரா இல்லையா என்று முடிவு செய்ய முடியுமா? முடியும் என்று விளக்குகிறது இந்த நாலடியார்ப் பாடல்.



தன் அறிவுக்கு நிகரில்லா ஒருவர் தன்னைத் தாழ்வாக பேசியதைக் கேட்ட கீழ் மக்கள், மிகுந்த நேரம் செலவிட்டு அதனை ஆராய்ந்து, அதனை மீண்டும் மீண்டும் மனதில் நினைத்து வருந்தி, ஊரெல்லாம் அதனைக் கேட்கும் படி பலரிடம் சென்று அதனை முறையிட்டு, தன் வருத்தத்தை தன் உடம்பசைவுகளிலும் தெரிவித்து, அருகில் தூண் இருந்தால் அதில் முட்டிக்கொண்டும் தன் கோபத்தை வெளிப்படுத்துவர். ஆனால் கற்றறிந்த சான்றோர், அவ்வாறு அறிவில் நிகரில்லா ஒருவர் தாழ்வாகப் பேசினாலும், அதனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல், அவர்கள் அமைதியாக, கோபம் இல்லாமல் நடந்துகொள்வார்கள்.

இந்தப் பாடல் படிக்கும் பொழுது சிறு வயதில் நான் கேட்ட ஒரு சொலவடை நினைவில் வருகிறது “சூரியன பார்த்து நாய் குரைத்தால்,நாய்க்குத்தான் வாய் வலிக்கும்"  


பாடல்:
நேர்த்து நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால்
வேர்த்து வெகுளார் விழுமியோர் - ஓர்த்தனை
உள்ளத்தான் உள்ளி உரைத்துராய் ஊர்கேட்பத்
துள்ளித்தூண் முட்டுமாம் கீழ்.

பதம் பிரித்த பாடல்:
நேர்த்து, நிகர் அல்லார் நீர் அல்ல சொல்லியக்கால்,
வேர்த்து வெகுளார், விழுமியோர்; ஓர்த்து அதனை,
உள்ளத்தான் உள்ளி, உரைத்து, உராய், ஊர் கேட்ப,
துள்ளி, தூண் முட்டுமாம், கீழ்.

அருஞ்சொற்பொருள்:
விழுமியோர் - சான்றோர்
ஓர்த்து - ஆராய்ந்து
கீழ் - இங்கு கீழ்மக்களைக் குறிக்கிறது.

சனி, 25 ஏப்ரல், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 63

அவன் அந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று சில மாதங்கள் ஆகி விட்டன. நிறுவனத்தின் அனைத்துப் பிரிவுகளையும் நன்கு புரிந்து கொண்டுவிட்டான். ஒவ்வொரு பிரிவின் நோக்கம் என்ன, அதன் வருவாய் செலவு என்று அனைத்தும் புரிந்து கொண்ட பின், சிற்சில பிரிவுகளில் வருவாயைக் கூட்ட மாற்றங்கள் தேவை என்றறிந்து, அவற்றைச் செயலாற்றத் தொடங்கினான். மாற்றம் என்றவுடன் மனமுவந்து செய்யும் மாந்தர் சிலர் தான். அதனால் அவனுக்கு மாற்றங்களைச் செய்ய சற்று கடினமாக இருந்தது. பலமுறை சொல்லியும் தான் சொன்னதைக் கேட்காமல் இருந்த ஒரு பிரிவின் தலைவரைப் பார்த்துப் பேசும் பொழுது அவனையும் அறியாமல், அவன் தன் கோபத்தை வெளியிட நேர்ந்தது. அவ்வாறு நடந்து கொண்ட விதம் அவனைப்  பாதித்ததனால், அவன் அங்கிருந்து விலகி, சில நிமிடங்கள்  தனியாக இருக்க நினைத்து, மன்னிப்புக் கேட்டு தன் அறைக்குச் சென்றான். தன் இருக்கையின் அருகே இருந்த நாலடியார் நூலை எடுத்து சினமின்மை அதிகாரத்தைப் புரட்ட, அவன் கண்களில் பட்டது இந்தப் பாடல்.



தாம் என்ன பேசுகின்றோம் என்று அறியாமல், தன் நாவினைக் காக்காமல், ஒருவர் கட்டுப்பாடில்லாமல் தன் வாயைத் திறந்து, கோபம் மிகுதி கொண்டு பேசினால், அவ்வகைச் சொற்கள் கேட்பவரை பாதிப்பது மட்டுமல்லாமல், அவ்வாறு பேசியவரையும் என்றும் பாதிக்கும். இதனை நன்கு உணர்ந்த, கேள்வி அறிவு மற்றும் ஆய்வறிவு கொண்ட அறிவுடைய மேல்மக்கள், மனம் பாதிக்கக் கூடிய சுடும் சொற்களை ஒரு நாளும் பேச மாட்டார்கள்.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

என்ற திருக்குறளின் வழி ஒருவர் நாவினால் பேசிய சினம் மிகுந்த சொல் கேட்பவரின் மனதில் என்றும் ஆறாத வடுவாக இருக்கும் என்பது உணர்த்தப் படுகிறது. ஆனால் இந்தப் பாடலில், கேட்பவர் மட்டுமல்லாமல் சினத்துடன் பேசியவர் மனத்தையும் புண் படுத்தக் கூடியது சினம் மிகுந்த சொற்கள், என்று விளக்கப் படுகிறது. அதனால் அவற்றைத் தடுப்போமாக.

பாடல்:
காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லுஞ்சொல்
ஓவாதே தன்னைச் சுடுதலால் - ஓவாதே
ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து.

பதம் பிரித்த பாடல்:
காவாது, ஒருவன் தன் வாய் திறந்து சொல்லும் சொல்
ஓவாதே தம்மைச் சுடுதலால், ஓவாதே
ஆய்ந்து அமைந்த கேள்வி அறிவுடையார், எஞ் ஞான்றும்,
காய்ந்து அமைந்த சொல்லார், கறுத்து.

அருஞ்சொற்பொருள்:
காவாது - காக்காது
ஓவாதே - நீங்காமல், இடை விடாமல்
எஞ் ஞான்றும் - எந்த நாளும்


வெள்ளி, 24 ஏப்ரல், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 62

நமது மனநிலை என்பது நம் கட்டுப்பாட்டில் உள்ளதா? நாம் நம் மனதைக் கையாளுகின்றோமா அல்லது நிகழ்வுகளின் ஆளுமையில் நம் மனதினை விட்டு அதன் வழி செல்கின்றதா? இவ்வினாக்களுக்கு விடையளிக்க நாலடியார்ப் பாடலைப் பார்ப்பதற்கு முன், ஒரு சில நாட்களுக்கு முன் மின் அஞ்சல் வழி வந்த ஒரு சிறு கதையினைப் பார்ப்போம். இதனை கூகிள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை அவர்கள் தன் பேச்சில் கூறியிருக்கிறார்.



“ஒரு உணவகம். அங்கு ஒரு பெண் சாப்பிட வந்தாள். அப்பொழுது அங்கு ஒரு கரப்பான் பூச்சி வந்து அவள் மேல் விழுந்தது. துள்ளிக் குதித்தாள் அந்தப் பெண். அவள் துள்ள அந்த கரப்பான் பூச்சி இன்னொரு பெண் மேல் விழ அவளும் துள்ள இவ்வாறு அந்த இடம் அமளியில் மூழ்கியது. இதனைப் பார்த்து, அங்கு வந்த சிப்பந்தி, அந்த கரப்பான் பூச்சியை எந்த வித சலமும் இல்லாமல் எடுத்து வெளியே கொண்டு போய் விட்டார். கரப்பான் பூச்சி ஒன்று தான். அதனை ஒவ்வொருவரும் கையாண்ட விதம் வேறு.”

இது போன்று நமக்கு நடக்கும் நிகழ்வுகளுக்கு நாம் எவ்வாறு எதிர்வினயாற்றுகின்றோம் என்பதில் தான் நம் மன நிலை நிர்ணயிக்கப் படுகின்றது. இதனை இங்கு அழகாக விளக்குகின்றது இந்தப் பாடல்.

ஒருவர் ஒரு காரியத்தை முடிக்க, தனது மனத்தை ஒருமைப்படுத்தி, வேலை செய்து வருகின்றார். அவ்வாறு செய்யும்பொழுது, அவமதிப்புகள், ஆம் ஒன்றல்ல இரண்டல்ல, பல அவமதிப்புகள் சேர்ந்து வரும் பொழுது, தனது பாதங்களை தாம் செல்லும் வழியில் இருந்து தவற விடாமல், தன் வினைகளை முடிப்பர். அவ்வாறு திண்மையுள்ளம் கொண்டவர், சிறு விடயங்கள் நடக்கும் பொழுது, அதன் காரணமாக கோபம் அடைந்து , அதன் காரணமாக சிறப்புமிக்க தமது உயிரின் பகுதியினை இழக்கமாட்டார்கள்.

கோபம் அடைவதால் நம் உளநிலை பாதிக்கப் பட்டு அதனால் உடல் நிலை பாதிப்பப்பட்டு, அதன் விளைவாக உயிர்நிலை பாதிக்கப்படுவதை மிகவும் அருமையாக எடுத்தியம்புகிறது இப்பாடல்.



பாடல்:
தண்டாச் சிறப்பின்தம் இன்னுயிரைத் தங்காது
கண்டுழி யெல்லாம் துறப்பவோ - மண்டி
அடிபெயரா தாற்ற இளிவந்த போழ்தின்
முடிகிற்கும் உள்ளத் தவர்.

பதம் பிரித்த பாடல்:
தண்டாச் சிறப்பின் தம் இன் உயிரைத் தாங்காது,
கண்டுழி எல்லாம் துறப்பவோ-மண்டி,
அடி பெயராது, ஆற்ற இளி வந்த போழ்தின்
முடிகிற்கும் உள்ளத்தவர்?

அருஞ்சொற்பொருள்:
தண்டா - அழியாத, நீங்காத
உழி - சிறிய விடயங்கள்
மண்டி - அடர்ந்து
இளி - அவமதிப்பு
முடிகிற்கும் - முடிக்கும்


இது வரை வெளியிடப்பட்ட பாடல்கள் மற்றும் கருத்துகளின் தொகுப்பினைப் படிக்க: http://thamizhvaan.blogspot.com

புதன், 22 ஏப்ரல், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 61

அன்றைய நாள் மிக நன்றாக சென்று கொண்டிருந்தது. அவளுடைய அலுவல்கள் எல்லாம் தடையின்றி முடிந்ததால், அவள் மாலை 6 மணிக்கே அலுவலகம் விட்டு புறப்பட்டதால், பூப்பந்தாட்டம் விளையாட, இனிய தென்றல் காற்று வருட, நடந்து சென்றாள். அப்பொழுது திடீரென ஒரு ஈ எங்கிருந்தோ வந்து அவளைச் சுற்றி அவள் தலை மேல் உட்கார்ந்தது. அதனை ஒரு பொருட்டாக மதியாமல், அவள் நடந்து சென்றாள். இவ்வகை இயற்கை காட்சிகள் எவ்வளவு அழகாக நம் தமிழில் உவமைகளாக எடுத்தாளப்பட்டுள்ளன என்று வியந்த வண்ணம், தன் நடையைத் தொடர்ந்தாள். அவ்வாறான சிந்தனைக்குக் காரணம் இந்த நாலடியார்ப் பாடல்.



அங்கும் இங்கும் பறக்கும் ஈ நம் உடல் மேல் உட்காரலாம். நம் தலை மேலே ஏறி தன் சிறு கால்களுடன் உட்காரலாம். அவ்வகை ஈ என்ன செய்தாலும் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டோம். அது போல், நம்மை நன்றாக மதிக்கும் ஒருவரும், ஒரு சில சமயங்களில், நம்மை தாழ்த்திப் பேசலாம். நம்மை மதிக்காமல், நம்மை தாழ்த்துவாரும் இருக்கலாம். ஆனால் மற்றவரின் தாழ்த்துதல் எவ்வாறு இருந்தாலும் நாம் அதனை பெரிதாக எடுத்துக்கொண்டு, மற்றவரை மனதளவில் எரிக்கும் தன்மை கொண்ட சினத்தைக் கைக்கொள்வது நல்ல செயல் அன்று.

பாடல்:
மதித்திறப் பாரும் இறக்க மதியா
மிதித்திறப் பாரும் இறக்க - மிதித்தேறி
ஈயுந் தலைமேல் இருத்தலால் அஃதறிவார்
காயும் கதமின்மை நன்று.

பதம் பிரித்த பாடல்:
மதித்து இறப்பாரும் இறக்க! மதியார்,
மிதித்து இறப்பாரும் இறக்க! மிதித்து ஏறி,
ஈயும் தலைமேல் இருத்தலால், அஃது அறிவார்
காயும் கதம் இன்மை நன்று.

அருஞ்சொற்பொருள்:
இறக்க - ஒருவரைத் தாழ்த்துதல்

கதம் - கோபம்

திங்கள், 20 ஏப்ரல், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 60

ஏழை என்பவர் யார்? செல்வந்தர் என்பவர் யார்? ஏழை, செல்வந்தர் என்ற சொற்கள் ஒருவரின் பொருட்செல்வ நிலையைக் குறிப்பது மட்டும்தானா? அருட்செல்வம் அதில் அடங்காதா? அவ்வாறு அருட்செல்வம் அடங்கும் என்றால் அந்த அருட்செல்வத்தை எவ்வாறு வரையறுப்பது? பொருட்செல்வத்தை வரையறுப்பது எளிது. ஒருவர் எவ்வளவு பொருள் வைத்திருக்கிறார் என்பது அவரது இல்லம், வங்கி, முதலீடுகள் என்று அனைத்தையும் கணக்கிட்டால் தெரிந்துவிடும். இவ்வாறு ஒருவரின் பொருட்செல்வ நிலையை நிர்ணயித்து விடலாம். அருட்செல்வ நிலையை எவ்வாறு நிர்ணயிப்பது? அருட்செல்வத்தின் ஒரு பரிமாணமான துறவு நிலையில் இருந்து, அதனை எவ்வாறு வரையறுக்கலாம் என்பதை, இந்த நாலடியார்ப் பாடலில் பார்க்கலாம்.




சிறிது காலம் மட்டுமே நிலைக்கக் கூடிய சிற்றின்பத்தினை அடைய, துன்பங்கள் மேலும் மேலும் வருவது தெரிந்தும், சிற்றின்பத்தையே விரும்பிச் செல்வர் அறிவில் குறைந்த ஏழை மாந்தர். அதே சமயத்தில், சிற்றின்பம் தங்கள் வழி வரும் பொழுது, அதனுடன் இணைந்திருக்கும் இன்னல்களை நன்கறிந்த, அச்சிற்றின்பத்தில் திளைக்காமல் திகழ்வர் மேன்மக்கள்.

பாடல்:

துன்பமே மீதூரக் கண்டும் துறவுள்ளார்
இன்பமே காமுறுவர் ஏழையார் - இன்பம்
இசைதொறும் மற்றதன் இன்னாமை நோக்கிப்
பசைதல் பரியாதாம் மேல்.


பதம் பிரித்த பாடல்:

துன்பமே மீதூரக் கண்டும், துறவு உள்ளார்,
இன்பமே காமுறுவர், ஏழையார்; இன்பம்
இசைதொறும், மற்று அதன் இன்னாமை நோக்கி,
பசைதல் பரியாதாம், மேல்.


அருஞ்சொற்பொருள்:

மீதூர - மிகுந்து மிகுந்து மேலும் வருதல்
உள்ளார் - நினைக்காதவர்
இசைதொறும் - வரும் பொழுது
பசைதல் - ஆசைப் படுதல்
பரியாது - விரும்பாது

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 59

துறவு மேற்கொள்பவர் யார்? ஆசைகளைத் துறந்தவர் துறவு மேற்கொள்பவரா ? அனைவரிடத்தும் அன்பு காட்டுபவர் துறவு மேற்கொள்பவரா? ஆசைகளைத் துறந்து, துறவு மேற்கொண்ட பின்னர், ஒருவர் துறவினை மேற்கொள்ள என்ன செய்ய வேண்டும்?  இவ்வகை வினாக்களுக்கு விடை பகர வருகின்றது இப்பாடல்.




ஒருவர் துறவு வழி மேற்கொண்ட பின்னாலும், அவருடைய ஐந்து புலன்களின் வழி நுகரப்படும் செயல்களினால், அவருடைய ஆசைகள் தூண்டிவிடப்படும். அவ்வாறு தூன்டத்தல் உண்டாகும் பொழுது தனது மனதினை அலைய்பாய விடாமல், அதனை ஒருவழிப் படுத்தி, உடம்பு, கண், வாய் (நாக்கு), மூக்கு, காது என்ற ஐந்து புலன்களினால் உண்டாகும் கட்டற்ற ஆசைகளைக் கட்டுப்படுத்தி திகழ்பவரே துறவு மேற்கொள்பவர் ஆவார். அவ்வாறு துறவு மேற்கொள்பவர் வீடு பேறு, அதாவது முக்திநிலை, அடைபவர் ஆவர்.

“பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்”

என்ற திருக்குறளும் இதனைத்தான் குறிப்பிட்டு விளக்குகிறது.



பாடல்:

மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினைக் - கைவாய்
கலங்காமற் காத்துய்க்கும் ஆற்ற லுடையான்
விலங்காது வீடு பெறும்

பதம் பிரித்த பாடல்:

மெய், வாய், கண், மூக்கு, செவி எனப் பேர் பெற்ற
ஐ வாய வேட்கை அவாவினை, கைவாய்,
கலங்காமல் காத்து, உய்க்கும் ஆற்றல் உடையான்
விலங்காது வீடு பெறும்.

அருஞ்சொற்பொருள்:

கைவாய் - ஒழுக்கம் மிகுந்த வழி
விலங்காது - தவறாது