புதன், 17 ஜூன், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 67

ஒருவர் ஒரு செயலை செய்யத் தக்கவர் என்று எப்பொழுது மதிக்கப் படுவார்? அவர் ஒரு செயலை செய்ய முடியாதவர் என்று எப்பொழுது மதிக்கப் படுவார்? செய்யப் படும் செயலின் தன்மைக்கும் இவ்வாறு மதிப்பிடப் படுவதற்கும் தொடர்பு உண்டா? நன்மையை உண்டாக்கும் செயலுக்கும் தீமையை உண்டாக்கும் செயலுக்கும் வேறுபாடு உண்டா? இருக்கின்றது என்கின்றது இந்த நாலடியார்ப் பாடல்.



ஒருவர் நம் முன் பகைமையை வெளிப்படுத்தி நடந்துகொள்ளும் பொழுது, ஒருவர் அவரிடம் பகைமை பாராட்டவில்லை என்றால் அதனை இயலாமை என்று அறிவில் சிறந்த பெரியோர் கூற மாட்டார்கள். எனவே, ஒருவர் தம் பகையைக் கட்டுப் படுத்தாமல், துன்பம் விளைவிக்கக் கூடிய செயல்களைச் செய்தால், நாம் அவருக்கு திருப்பி துன்பங்கள் செய்யாமல் இருப்பது நல்லது.

இதனைத் தான் திருவள்ளுவர்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்துவிடல்

என்று கூறுகின்றார்.



பாடல்: 

மாற்றாராய் நின்றுதம் மாறேற்பார்க் கேலாமை
ஆற்றாமை என்னார் அறிவுடையார் - ஆற்றாமை
நேர்த்தின்னா மற்றவர் செய்தக்கால் தாம் அவரைப்
பேர்த்தின்னா செய்யாமை நன்று.

பதம் பிரித்த பாடல்: 

மாற்றாராய் நின்று, தம் மாறு ஏற்பார்க்கு ஏலாமை,
'ஆற்றாமை' என்னார், அறிவுடையார்; ஆற்றாமை
நேர்த்து, இன்னா மற்று அவர் செய்தக்கால், தாம் அவரைப்
பேர்த்து இன்னா செய்யாமை நன்று.

அருஞ்சொற்பொருள்:

மாற்றாராய் - பகைவராய்
மாறு - பகைமை
ஏலாமை - செய்யாமை
ஆற்றாமை - இயலாமை
பேர்த்து - திருப்பி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக