புதன், 17 ஜூன், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 68

அலுவலகத்தில் அன்றைய தினம் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு பரபரப்பாக அலுவல்கள் நடந்து கொண்டிருந்தன. ஓர் அறையில் ஒரு கூட்டத்தை முடித்து வெளிவரும்பொழுது தான், அவன் அந்தக் காட்சியைப் பார்த்தான். நிறுவனத்தின் உபதலைவர் ஒரு தொழிலாளியிடம் கார சாரமாக பேசிக் கொண்டிருந்தார். எப்பொழுதும் அமைதியாகத்தானே இருப்பார் என்று மனதில் நினைத்துக் கொண்டு அவன் தன் அறையினுள் நுழைந்தான். சில நிமிடங்கள் கழித்து தேநீர் அருந்தச் செல்லும் பொழுது, கோபத்துடன் பேசிய உபதலைவர் அந்த தொழிலாளியிடம் மிகவும் கனிவாக பேசிக் கொண்டிருந்தார். அதனைப் பார்த்த அவனுக்கு நினைவில் வந்தது இந்த நாலடியார்ப் பாடல்.



நீர் பொதுவாக எப்பொழுதும் தண்மை கொண்டது. அதனால் தான் தண்ணீர் என்கின்றோம். அந்த நீர் சுட வைக்கும் பொழுது தண்மை நீங்கி, சூடேறி, வெந்நீர் ஆக மாறும். அவ்வாறு மாறிய வெந்நீர் சிறிது நேரம் கழித்து, சூடு இறங்கி தண்ணீராக மாறிவிடும். அது போல அறிவிற் சிறந்த சான்றோர், ஏதோவொரு காரணத்திற்காக கோபம் கொண்டாலும், அந்த கோபம் சிறிது நேரத்தில் தணிந்து விடும். ஆனால், அறிவில் கீழானவர், கோபம் அடைந்தார்கள் என்றால், அவர்கள் எவ்வளவு நாட்கள் ஆனாலும், அவர்கள் கோபம் தீராது.

கோபம் வருவது மனிதற்கு இயல்பான பண்பு, அதனை எவ்வாறு கையாளுகிறோம் என்பதை வைத்து அவர் அறிவிற் சிறந்த சான்றோரா இல்லையா என்று தெரிய வரும்.

பாடல்:

நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி
கெடுங்காலம் இன்றிப் பரக்கும் - அடுங்காலை
நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே
சீர்கொண்ட சான்றோர் சினம்.

பதம் பிரித்த பாடல்:

நெடுங் காலம் ஓடினும், நீசர் வெகுளி
கெடும் காலம் இன்றிப் பரக்கும்; அடும் காலை
நீர் கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே
சீர் கொண்ட சான்றோர் சினம்.

அருஞ்சொற்பொருள்:

நீசர் - அறிவில் குறைந்த கீழானவர்
பரக்கும் - பெருகும்
அடும் - சுடும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக