ஞாயிறு, 14 ஜூன், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 66

வார இறுதியினை இயற்கையோடு செலவிடலாம் என்று அவள் நினைத்து, காணகத்தில் தங்குவதற்குத் தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு அவள் தன் மகிழுந்துவில் பயணிக்கத் துவங்கினாள். ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பின் தங்க வேண்டிய இடம் வந்தடைந்தாள். தங்கும் கொட்டகையை நிலத்தில் பதித்த பின், கோடை கால இள வெயிலில் தென்றல் காற்று இதமாக வருட ஒரு சுற்று நடக்கத் துவங்கினாள். காட்டிற்குள் சென்ற அவள், அதன் உட்புதரில் நாகம் ஒன்றைக் கண்டாள். அந்த நாகம் அமைதியாக இருந்தது. அதே நாகம் சீற்றம் கொண்டால் எவ்வாறு இருக்கும் என்று நினைத்துப் பார்த்தாள். அப்பொழுது சீற்றம் இல்லாத அமைதியான நாகம் உவமையாக பயன்படுத்தப் பட்ட நாலடியார்ப் பாடல் அவள் மனதினில் வலம் வந்தது.



சீறி வரும் நாகம் மந்திரிக்கப் பட்ட திருநீற்றால் அமைதியடையும் என்ற நம்பிக்கை இருந்தது. அவ்வாறு இருக்கும் நாகம் எப்படி அமைதியாக இருக்குமோ, அது போன்று குணத்தில் பெரியோர், தங்களது குலப் பெருமை கருதி, குணத்தில் தாழ்ந்து இருக்கும் கயவர் தீமையான சொற்களை, தங்கள் மீது கற்கள் எறிவது போல், எல்லோர் முன்னிலையில் பேசினாலும், அவர்கள் பொறுமையாக இருப்பர்.

பாடல்:
கல்லெறிந் தன்ன கயவர்வாய் இன்னாச்சொல்
எல்லாருங் காணப் பொறுத்துய்ப்பர் - ஒல்லை
இடுநீற்றால் பைஅவிந்த நாகம்போல் தத்தம்
குடிமையான் வாதிக்கப் பட்டு.

பதம் பிரித்த பாடல்:
கல் எறிந்தன்ன கயவர் வாய் இன்னாச் சொல்
எல்லாரும் காணப் பொறுத்து, உய்ப்பர்-ஒல்லை,
இடு நீற்றால் பை அவிந்த நாகம்போல், தம்தம்
குடிமையான் வாதிக்கப்பட்டு.

அருஞ்சொற்பொருள்:
ஒல்லை - விரைவாக
பை அவிந்த - படம் சுருங்கி சினம் அடங்கிய
வாதிக்கப் பட்டு - தடை செய்யப் பட்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக