வெள்ளி, 19 ஜூன், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 69

ஒருவர் உயர்ந்தோர் என்று எப்பொழுது கருதப் படுவார்? கல்வியில் சிறந்து விளங்கும் போதா? அல்லது கல்வியில் சிறந்து அதனை மற்றவருக்குக் கற்பிக்கும் பொழுதா? செல்வச் செழிப்பில் கொழிக்கும் பொழுதா? இல்லை அச்செல்வம் கொழிக்கின்ற காரணத்தால் அதனை மற்றவருக்குக் கொடையாகக் கொடுக்கும் பொழுதா? வான் அளவு உயர்ந்த புகழ் கொண்டவர் என்று ஒருவர் புகழப் பட அவருக்கு இருக்க வேண்டிய இயல்பு என்ன?  விடை தருகின்றது இந்த நாலடியார்ப் பாடல்.



ஒருவர் தமக்கு நல்லது செய்ததை நினைக்காமல் அவ்வாறு நல்ல செயல் செய்தவருக்கே ஒருவர் தீங்கு மிகுதியாக செய்தாலும், அவ்வாறு தீங்கு செய்தவருக்கு நல்ல செயல் மட்டுமே செய்து தவறியும் அவருக்கு தீய செயல்களை செய்ய மாட்டார்கள் வான் புகழ் கொண்ட உயர்ந்தோர்.

“தவறியும் தீங்கு இழைக்க மாட்டார்கள்" என்று கூற்றினால், பெரியோரின்  இயற்கை குணம் எப்பொழுதும் நன்மை செய்வது என்கின்றார் இந்த நாலடியார்ப் புலவர்.


பாடல்: 

உபகாரம் செய்ததனை ஓராதே தங்கண்
அபகாரம் ஆற்றச் செயினும் - உபகாரம்
தாம்செய்வ தல்லால் தவற்றினால் தீங்கூக்கல்
வான்தோய் குடிப்பிறந்தார்க் கில்.

பதம் பிரித்த பாடல்: 

உபகாரம் செய்ததனை ஓராதே, தங்கண்
அபகாரம் ஆற்றச் செயினும், உபகாரம்
தாம் செய்வது அல்லால், தவற்றினால் தீங்கு ஊக்கல்
வான் தோய் குடிப் பிறந்தார்க்கு இல்.

அருஞ்சொற்பொருள்:
உபகாரம் - நன்மை
ஓராதே - நினைக்காமல்
தங்கண் - தம்மிடம்
அபகாரம் - தீய செயல்
ஆற்ற - மிகுதியாக


இது வரை வெளியிடப்பட்ட பாடல்கள் மற்றும் கருத்துகளின் தொகுப்பினைப் படிக்க: http://thamizhvaan.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக