வெள்ளி, 19 ஜூன், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 70

நாலடியார்ப் பாடல்களில் நகைச்சுவை உண்டா? நாம் பள்ளிகளில் படித்த பாடல்களில் பொருள் பொதிந்து பல பாடல்கள் படித்துள்ளோம். ஆனால் நம்மை சிரிக்க வைத்து பின்பு சிந்திக்க வைத்த நாலடியார்ப் பாடல்கள் படித்தது இல்லை. இன்று நாம் பார்க்கப் போகும் பாடல் ஒரு நகைச்சுவை மிகுந்த உவமையினை கொண்டுள்ளது. கதிரவனையும் நாயையும் இணைத்து வரும் சொலவடை கேட்டுள்ளோம். இப்பாடலின் உவமையில் நாயையும் மனிதரையும் இணைத்து கையாண்டுள்ளார் புலவர்.



கோபம் கொண்டு ஒரு நாய், தன் சினம் மிகுதியால், ஒருவரின் உடம்பைக் கடித்து தசையைப் பிடுங்கினாலும், நாய் நம்மை இவ்வாறு துன்புறுத்திவிட்டதே என்று அந்த நாயை திருப்பிக் கடிக்கும் மனிதர் இவ்வுலகில் இல்லை. அது போல, அறிவில் குறைந்த கீழானவர் தகுதி குறைந்த தாழ்வான சொற்களைக் கூறும்பொழுது அறிவிற் சிறந்த மேன் மக்கள் தமது வாயினால் அந்த தாழ்வான சொற்களைச் சொல்வார்களோ?

பாடல்:

கூர்த்துநாய் கௌவிக் கொளக்கண்டும் தம்வாயாற்
பேர்த்துநாய் கௌவினார் ஈங்கில்லை - நீர்த்தன்றிக்
கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ
மேன்மக்கள் தம்வாயால் மீட்டு.

பதம் பிரித்த பாடல்:

கூர்த்து நாய் கௌவிக் கொளக் கண்டும், தம் வாயால்
பேர்த்து நாய் கௌவினார் ஈங்கு இல்லை; நீர்த்து அன்றிக்
கீழ்மக்கள் கீழ் ஆய சொல்லியக்கால், சொல்பவோ,
மேன்மக்கள் தம் வாயால் மீட்டு?

அருஞ்சொற்பொருள்:

கூர்த்து - சினம் மிகுந்து
பேர்த்து - திருப்பி
நீர்த்து - தகுதி

இது வரை வெளியிடப்பட்ட பாடல்கள் மற்றும் கருத்துகளின் தொகுப்பினைப் படிக்க: http://thamizhvaan.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக