வியாழன், 27 ஆகஸ்ட், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 71

எப்பொழுதும் அவன் யாருடன் பேசுகிறோம் என்று சிந்தித்துத் தான் பேசுவான். அன்றைக்குப் பூங்காவில் நடந்து முடித்த பிறகு, நெருங்கிப் பழகாத ஒருவரிடம் பேசத் துவங்கினான். சிறிது நேரம் சென்ற பின் தான் அவன் செய்த தவறு அவனுக்குப் புரிந்தது. அவன் பேசத் துவங்கிய உடன் அந்த நபர் இழிவான சொற்களையும், இழிவான செயல்களைப் பற்றியும் பேசத் தொடங்கினார். அடடா, நாம் சிறு வயதில் படித்த நாலடியார் பாடலின் வழி நடந்திருந்தால் இவ்வாறு நடந்திருக்காதே என்று எண்ணினான். 




இதோ அந்தப் பாடலின் பொருள்: மலையினை மாலை போன்று அருவி தழுவியதால் குளிர் அடைந்த மலையினைக் கொண்ட நாட்டைச் சார்ந்தவரே, அறிவில்லாத நபரிடம் பேசுவதைத் தவிர்க்கவும். அறிவில்லாதவரிடம் பேசினால் அவர் முறை தவறி எதிர்த்துப் பேசுவார். அதனால் முடிந்த வரை, அறிவில்லாதவரிடம் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது.


பாடல்:
கோதை யருவிக் குளிர்வரை நன்னாட
பேதையோ டியாதும் உரையற்க - பேதை
உரைப்பிற் சிதைந்துரைக்கும் வகையான்
வழுக்கிக் கழிதலே நன்று.

பதம் பிரித்த பாடல்:

கோதை அருவிக் குளிர் வரை நல் நாட!
பேதையோடு யாதும் உரையற்க! பேதை,
உரைக்கின், சிதைந்து உரைக்கும்; ஒல்லும் வகையான்
வழுக்கிக் கழிதலே நன்று

அருஞ்சொற்பொருள்:

கோதை - பூமாலை
சிதைந்து - முறை தவறி
ஒல்லும் வகையான் - முடிந்த வழிகளில்

கழிதல் - தவிர்த்தல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக