திங்கள், 31 ஆகஸ்ட், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 75

அன்று நடந்த நிகழ்வினை அவனால் நம்ப முடியவில்லை. ஏன் தன் தோழன் அவ்வாறு நடந்து கொண்டான்? அவனுடன்இவ்வளவு நாள் நன்றாக நெருக்கமுடன் பழகியும் அந்த நிகழ்வுக்குக் காரணம் என்ன? இதனைப் பொறுத்துக் கொள்வதா?இல்லை அவனிடம் இதைப் பற்றிப் பேசுவதா? இதனைப் பற்றி பேசினால் பொறுமை இழந்து கோபத்தில் பேசக் கூடாதவார்த்தைகளைப் பேசிவிடுவோமோ? பல வினாக்கள் தன் மனதில் வலம் வர, விடை பகர வந்தது இந்த நாலடியார் பாடல்.



வேறுபாடு இல்லாமல் இருவர் நன்றாகக் கலந்து நட்புடன் பழகிய பின், சரியான செய்கை என்று சான்றோர்களால்போற்றப்படாத இழிவான செயலை ஒருவர் செய்ய நேர்ந்தால், மற்றவர் பொறுத்துக் கொள்ள முடிந்த வரையிலும்பொறுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றால், அந்தக் குற்றத்தைப் பலரும்தெரிந்துகொள்ளுமாறு பழித்துப் பேசாமல், அவரிடம் இருந்து விலகிச் செல்லுதலே நலம் பயக்கும் செயலாகும்.

பாடல்:
வேற்றுமை யின்றிக் கலந்திருவர் நட்டக்கால்
தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்
ஆற்றுந் துணையும் பொறுக்க பொறானாயின்
தூற்றாதே தூர விடல்.


பதம் பிரித்த பாடல்:
வேற்றுமை இன்றிக் கலந்து, இருவர் நட்டக்கால்,
தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்,
ஆற்றும் துணையும் பொறுக்க! பொறான் ஆயின்
தூற்றாதே, தூர விடல்!

அருஞ்சொற்பொருள்:
நட்டக்கால் - நேசித்தால்
தேற்றா - தகுதியற்ற
ஆற்றுந் துணையும் - முடித்த அளவும்
தூற்றாதே - பழிக்காதே
தூர விடல் - விலகிச் செல்லுதல்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக