ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 74

அன்று ஞாயிறு மதியம். மதிய உணவு உண்ட களைப்பில் அவன் சிறு தூக்கம் போட்டு எழுந்தான். மாலை வெயில் இதமாக வீசப் பூங்கா சென்று வரலாம் என்று புறப்பட்டான். பூங்காவில் அவன் நண்பனைச் சந்தித்து நலம் விசாரித்து உரையாடல்கள் தொடர்ந்தன. அப்பொழுது அவன் நண்பன் எதிர்பாராவிதமாக ஒரு கேள்வியைக் கேட்டான் “ வாழ்வில் துன்பம் அடையாமல் வாழ என்ன வழி?” “திடீரென்று இப்படிக் கேட்டால் என்ன சொல்ல, யோசித்துத் தான் சொல்ல வேண்டும்” என்று மெதுவாகக் கூறி கொஞ்சம் யோசிக்க நேரம் உண்டாக்கிக் கொண்டான். “இந்தக் கேள்விக்கு எப்படிப் பதில் சொல்வது? பல வித கோணங்களில் இதற்குப் பதில் சொல்லலாமே!” என்று யோசிக்கும் பொழுது சட்டென்று அவனுக்கு நினைவில் வந்தது இந்த நாலடியார் பாடல். உடனே அதன் பொருளைக் கூறி பின்பு பாடலையும் கூறினான்.



இவ்வுலகில் அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து கொண்டு, அவ்வாறு அறிந்து கொண்டாலும் அந்த அறிவினால் தலைக் கனம் கொள்ளாமல், அடக்கமாக இருந்து, இவ்வுலகில் பார்த்து அஞ்சுவதற்கு அஞ்சி, இந்த உலகம் இன்புறுமாறு செய்யத் தகுந்தவற்றைச் செய்து, தாம் பெறுகின்ற ஊதியத்தில் இன்புற்று வாழ்ந்தால், எந்த நாளும் துன்பம் இல்லாமல் வாழலாம்.


பாடல்:
அறிவ தறிந்தடங்கி அஞ்சுவ தஞ்சி
உறுவ துலகுவப்பச் செய்து - பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது.

பதம் பிரித்த பாடல்:
அறிவது அறிந்து, அடங்கி, அஞ்சுவது அஞ்சி,
உறுவது உலகு உவப்பச் செய்து, பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்புடையார், எஞ் ஞான்றும்,
துன்புற்று வாழ்தல் அரிது.

அருஞ்சொற்பொருள்:
உறுவது - பொருத்தமான அல்லது தகுந்த செயல்
பெறுவதனால் - தமக்கு கிடைத்த ஊதியம் கொண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக