சனி, 29 ஆகஸ்ட், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 73

கடுஞ்சொல் எது? சொல்லப்படும் விடயம் நமக்கு அல்லது நம் மனதிற்கு ஏற்புடையதாக இல்லையென்றால் அது கடுஞ்சொல் ஆகுமா? நாம் கேட்க வேண்டும் என்று நாம் நினைப்பவற்றைக் கேட்பது இனிமையான சொல்லாகி விடுமா? கேட்பதற்குக் கடினமாக இருந்தாலும் ஒரு சொல் நல்ல சொல்லாக முடியுமா? கேட்பதற்கு இனிமையாக இருந்தும் ஒரு சொல் கடுஞ் சொல்லாகுமா? இவ்வினாக்களுக்கு விடை தருகின்றது இந்த நாலடியார் பாடல்.



பேரரும்புகள் தேனைக் கொண்டுள்ளதால், அவற்றைச் சுற்றி வண்டுகள் ஆர்ப்பரிக்க, வளம் பொருந்திய கடல் சூழ்ந்த, குளிர் காற்றுடன் நிலவும் கடற்கரையினைக் கொண்ட நாட்டின் தலைவனே! நல்ல அறிவுரை வழங்கும் சான்றோர் இருந்தால், அவ்வகைச் சான்றோர் தங்களின் உள்ளத்தில் உள்ள அன்பினால் நன்மை கருதி சொல்லும் சொல் கேட்பதற்குக் கொடிய சொல்லாக இருந்தாலும் தீயது ஆகாது. அன்பற்ற அயலவர் சொல்லும் சொல் கேட்பதற்கு இனிமையான சொல்லாக இருந்தாலும் அது தீயதாகும். கொடிய சொல், இனிய சொல் என்பது அந்தச் சொல் எதற்காகச் சொல்லப்பட்டது என்றுணர்ந்து, நன்மை பயக்கவேண்டும் என்பதற்காக அறிவுடையோர் சொல்லும் கடுஞ்சொல்லைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

பாடல்:
காதலாற் சொல்லுங் கடுஞ்சொல் உவந்துரைக்கும்
ஏதிலார் இன்சொலின் தீதாமோ - போதெலாம்
மாதர்வண்டு ஆர்க்கும் மலிகடல் தண்சேர்ப்ப !
ஆவ தறிவார்ப் பெறின்.

பதம் பிரித்த பாடல்:
காதலார் சொல்லும் கடுஞ் சொல், உவந்து உரைக்கும்
ஏதிலார் இன் சொலின் தீது ஆமோ-போது எலாம்
மாதர் வண்டு ஆர்க்கும் மலி கடல் தண் சேர்ப்ப!-
ஆவது அறிவார்ப் பெறின்?

அருஞ்சொற்பொருள்:
ஏதிலார் - அயலவர், அன்பும் பகைமையும் இல்லாதவர்
மலி - மிகுந்து
தண் - குளிர்ச்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக