வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 72

இவ்வுலகில் மனிதர் ஒருவரோடு ஒருவர் நல்லிணக்கம் கொண்டு வாழ நாம் என்ன செய்ய வேண்டும்? அதற்கான நல் வழி எது? தவிர்க்கப் பட வேண்டிய வழி எது? அவ்வாறு வழிதனை வரையறுக்கும்போது இழிவான செயல் என்று எதனைக் குறிப்பிடுகின்றனர்? இதோ இந்த நாலடியார் பாடல் இதனை அழகாக விளக்குகிறது.



அறிவு நிலையில் ஒருவருக்கு நிகரில்லாதவர், நற்குணம் அற்ற சொற்களைக் கூறும்போது, அறிவில் சிறந்த சாண்றோர் என்ன செய்ய வேண்டும்? தகுதி அறிவற்றவர் கூறிய சொற்களைப் பொறுத்துக் கொள்ளுதல் தான் அந்தச் சான்றோருக்கு உரிய தகுதி ஆகும். அவ்வாறு பொறுத்துக் கொள்ளவில்லை என்றால், ஒருவர் சாண்றோராக இருந்தாலும், நீர் சூழ்ந்த நிலப்பரப்பைக் கொண்ட இவ்வுலகம், அவ்வாறான குணத்தைப் புகழுக்கு ஏற்றது இல்லை என்று கூறும். அத்துடன் அந்தக் குணம் பழிப்பதற்கு ஏற்ற இழிகுணம் என்றும் கருதி விடும்.

பாடல்:

நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால் மற்றது
தாரித் திருத்தல் தகுதிமற் -றோரும்
புகழ்மையாக் கொள்ளாது பொங்குநீர் ஞாலம்
சமழ்மையாக் கொண்டு விடும்

பதம் பிரித்த பாடல்:

நேர் அல்லார் நீர் அல்ல சொல்லியக்கால், மற்று அது
தாரித்திருத்தல் தகுதி; மற்று ஓரும்
புகழ்மையாக் கொள்ளாது, பொங்கு நீர் ஞாலம்
சமழ்மையாக் கொண்டுவிடும்.

அருஞ்சொற்பொருள்:

தாரித்து இருத்தல் - பொறுத்துக் கொள்ளுதல்
சமழ்மை - இழிகுணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக