வியாழன், 30 ஏப்ரல், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 65

பொறுமையினை வரையருக்க வரும் இப்பாடல் புலன் அடக்கத்தில் துவங்குகிறது. ஒருவர்,  இளமைக் காலத்தில் தங்களின் ஐந்து புலன்களுக்கும்  மிக எளிதாக அடிமைப் பட்டு விடுவர். அவரே முதியவராகும் பொழுது புலனடக்கம் என்பது எளிதாகின்றது. ஆனால், உண்மையான புலனடக்கம் என்பது ஒருவர் இளையவராக இருக்கும் பொழுது அடக்குவதே என்று விவரிக்கிறது இப்பாடல்.

கொடை என்பது யாது? ஒருவரிடம் பொருள் குறைந்து இருக்கும் நிலையில், அவர் மற்றவருக்கு உதவி செய்வாரானால், அதுவே கொடை எனப்படும் என்று விளக்குகின்றது இந்தப் பாடல். இருக்கும் பொழுது கொடுப்பது எளிது. இல்லாமையில் வாடும் பொழுது ஈகை செய்யும் மனிதரே கொடை குணம் கொண்டவர்.



இதே போன்று, அனைவரையும் அடக்கி ஆள்கின்ற வலிமை உடைய ஒருவர், அவ்வாறு செய்யாமல், தனது வலிமையினை அடக்கி சினம் கொள்ளாமல், பொறுமையாக இருப்பார்களானால், அவரே பொறுமையினை கடைபிடிப்பவர். அந்த வலிமை உடல் வலிமையாக இருக்கலாம். அறிவின் வழி வரும் வலிமையாகவும் இருக்கலாம்.  

இப்பாடலைப் படிக்கும் பொழுது “பதவி வரும் போது, பணிவு வரவேண்டும் தோழா” என்ற கவிஞர் வாலி வரகுளின் வரிகள் நினைவுக்கு வருகிறது.

பாடல்:
இளையான் அடக்கம் அடக்கம் கிளைபொருள்
இல்லான் கொடையே கொடைப்பயன் - எல்லாம்
ஒறுக்கும் மதுகை உரனுடை யாளன்
பொறுக்கும் பொறையே பொறை.

பதம் பிரித்த பாடல்:
இளையான் அடக்கம் அடக்கம்; கிளை பொருள்
இல்லான் கொடையே கொடைப் பயன்; எல்லாம்
ஒறுக்கும் மதுகை உரனுடையாளன்
பொறுக்கும் பொறையே பொறை.

அருஞ்சொற்பொருள்:
ஒறுக்கும் - அடக்கியாள்கின்ற
மதுகை - வலிமை
உறனுடயாளன் - உடையவன்
பொறை - பொறுமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக