திங்கள், 20 ஏப்ரல், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 60

ஏழை என்பவர் யார்? செல்வந்தர் என்பவர் யார்? ஏழை, செல்வந்தர் என்ற சொற்கள் ஒருவரின் பொருட்செல்வ நிலையைக் குறிப்பது மட்டும்தானா? அருட்செல்வம் அதில் அடங்காதா? அவ்வாறு அருட்செல்வம் அடங்கும் என்றால் அந்த அருட்செல்வத்தை எவ்வாறு வரையறுப்பது? பொருட்செல்வத்தை வரையறுப்பது எளிது. ஒருவர் எவ்வளவு பொருள் வைத்திருக்கிறார் என்பது அவரது இல்லம், வங்கி, முதலீடுகள் என்று அனைத்தையும் கணக்கிட்டால் தெரிந்துவிடும். இவ்வாறு ஒருவரின் பொருட்செல்வ நிலையை நிர்ணயித்து விடலாம். அருட்செல்வ நிலையை எவ்வாறு நிர்ணயிப்பது? அருட்செல்வத்தின் ஒரு பரிமாணமான துறவு நிலையில் இருந்து, அதனை எவ்வாறு வரையறுக்கலாம் என்பதை, இந்த நாலடியார்ப் பாடலில் பார்க்கலாம்.




சிறிது காலம் மட்டுமே நிலைக்கக் கூடிய சிற்றின்பத்தினை அடைய, துன்பங்கள் மேலும் மேலும் வருவது தெரிந்தும், சிற்றின்பத்தையே விரும்பிச் செல்வர் அறிவில் குறைந்த ஏழை மாந்தர். அதே சமயத்தில், சிற்றின்பம் தங்கள் வழி வரும் பொழுது, அதனுடன் இணைந்திருக்கும் இன்னல்களை நன்கறிந்த, அச்சிற்றின்பத்தில் திளைக்காமல் திகழ்வர் மேன்மக்கள்.

பாடல்:

துன்பமே மீதூரக் கண்டும் துறவுள்ளார்
இன்பமே காமுறுவர் ஏழையார் - இன்பம்
இசைதொறும் மற்றதன் இன்னாமை நோக்கிப்
பசைதல் பரியாதாம் மேல்.


பதம் பிரித்த பாடல்:

துன்பமே மீதூரக் கண்டும், துறவு உள்ளார்,
இன்பமே காமுறுவர், ஏழையார்; இன்பம்
இசைதொறும், மற்று அதன் இன்னாமை நோக்கி,
பசைதல் பரியாதாம், மேல்.


அருஞ்சொற்பொருள்:

மீதூர - மிகுந்து மிகுந்து மேலும் வருதல்
உள்ளார் - நினைக்காதவர்
இசைதொறும் - வரும் பொழுது
பசைதல் - ஆசைப் படுதல்
பரியாது - விரும்பாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக