திங்கள், 27 ஏப்ரல், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 64

சான்றோரை மேன் மக்கள் என்றும் சான்றோர் அல்லாதவரை கீழ் மக்கள் என்று சொல்வர் நம் முன்னோர். சான்றோராரை நாம் எவ்வாறு கண்டு பிடிப்பது? இதற்கு பல விடைகள், பல விளக்கங்கள் உண்டு நம் பழம்பெரும் தமிழிலக்கியத்தில். தன் அறிவுக்கு நிகரில்லா ஒருவர்  தாழ்வாக மற்றொருவரை இகழ்ந்து பேசும்போது, அந்த மற்றொருவர் எவ்வாறு நடந்து கொள்வார்? இதனை வைத்து ஒருவர் கற்றறிந்த சான்றோரா இல்லையா என்று முடிவு செய்ய முடியுமா? முடியும் என்று விளக்குகிறது இந்த நாலடியார்ப் பாடல்.



தன் அறிவுக்கு நிகரில்லா ஒருவர் தன்னைத் தாழ்வாக பேசியதைக் கேட்ட கீழ் மக்கள், மிகுந்த நேரம் செலவிட்டு அதனை ஆராய்ந்து, அதனை மீண்டும் மீண்டும் மனதில் நினைத்து வருந்தி, ஊரெல்லாம் அதனைக் கேட்கும் படி பலரிடம் சென்று அதனை முறையிட்டு, தன் வருத்தத்தை தன் உடம்பசைவுகளிலும் தெரிவித்து, அருகில் தூண் இருந்தால் அதில் முட்டிக்கொண்டும் தன் கோபத்தை வெளிப்படுத்துவர். ஆனால் கற்றறிந்த சான்றோர், அவ்வாறு அறிவில் நிகரில்லா ஒருவர் தாழ்வாகப் பேசினாலும், அதனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல், அவர்கள் அமைதியாக, கோபம் இல்லாமல் நடந்துகொள்வார்கள்.

இந்தப் பாடல் படிக்கும் பொழுது சிறு வயதில் நான் கேட்ட ஒரு சொலவடை நினைவில் வருகிறது “சூரியன பார்த்து நாய் குரைத்தால்,நாய்க்குத்தான் வாய் வலிக்கும்"  


பாடல்:
நேர்த்து நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால்
வேர்த்து வெகுளார் விழுமியோர் - ஓர்த்தனை
உள்ளத்தான் உள்ளி உரைத்துராய் ஊர்கேட்பத்
துள்ளித்தூண் முட்டுமாம் கீழ்.

பதம் பிரித்த பாடல்:
நேர்த்து, நிகர் அல்லார் நீர் அல்ல சொல்லியக்கால்,
வேர்த்து வெகுளார், விழுமியோர்; ஓர்த்து அதனை,
உள்ளத்தான் உள்ளி, உரைத்து, உராய், ஊர் கேட்ப,
துள்ளி, தூண் முட்டுமாம், கீழ்.

அருஞ்சொற்பொருள்:
விழுமியோர் - சான்றோர்
ஓர்த்து - ஆராய்ந்து
கீழ் - இங்கு கீழ்மக்களைக் குறிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக