புதன், 22 ஏப்ரல், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 61

அன்றைய நாள் மிக நன்றாக சென்று கொண்டிருந்தது. அவளுடைய அலுவல்கள் எல்லாம் தடையின்றி முடிந்ததால், அவள் மாலை 6 மணிக்கே அலுவலகம் விட்டு புறப்பட்டதால், பூப்பந்தாட்டம் விளையாட, இனிய தென்றல் காற்று வருட, நடந்து சென்றாள். அப்பொழுது திடீரென ஒரு ஈ எங்கிருந்தோ வந்து அவளைச் சுற்றி அவள் தலை மேல் உட்கார்ந்தது. அதனை ஒரு பொருட்டாக மதியாமல், அவள் நடந்து சென்றாள். இவ்வகை இயற்கை காட்சிகள் எவ்வளவு அழகாக நம் தமிழில் உவமைகளாக எடுத்தாளப்பட்டுள்ளன என்று வியந்த வண்ணம், தன் நடையைத் தொடர்ந்தாள். அவ்வாறான சிந்தனைக்குக் காரணம் இந்த நாலடியார்ப் பாடல்.



அங்கும் இங்கும் பறக்கும் ஈ நம் உடல் மேல் உட்காரலாம். நம் தலை மேலே ஏறி தன் சிறு கால்களுடன் உட்காரலாம். அவ்வகை ஈ என்ன செய்தாலும் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டோம். அது போல், நம்மை நன்றாக மதிக்கும் ஒருவரும், ஒரு சில சமயங்களில், நம்மை தாழ்த்திப் பேசலாம். நம்மை மதிக்காமல், நம்மை தாழ்த்துவாரும் இருக்கலாம். ஆனால் மற்றவரின் தாழ்த்துதல் எவ்வாறு இருந்தாலும் நாம் அதனை பெரிதாக எடுத்துக்கொண்டு, மற்றவரை மனதளவில் எரிக்கும் தன்மை கொண்ட சினத்தைக் கைக்கொள்வது நல்ல செயல் அன்று.

பாடல்:
மதித்திறப் பாரும் இறக்க மதியா
மிதித்திறப் பாரும் இறக்க - மிதித்தேறி
ஈயுந் தலைமேல் இருத்தலால் அஃதறிவார்
காயும் கதமின்மை நன்று.

பதம் பிரித்த பாடல்:
மதித்து இறப்பாரும் இறக்க! மதியார்,
மிதித்து இறப்பாரும் இறக்க! மிதித்து ஏறி,
ஈயும் தலைமேல் இருத்தலால், அஃது அறிவார்
காயும் கதம் இன்மை நன்று.

அருஞ்சொற்பொருள்:
இறக்க - ஒருவரைத் தாழ்த்துதல்

கதம் - கோபம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக