வெள்ளி, 24 ஏப்ரல், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 62

நமது மனநிலை என்பது நம் கட்டுப்பாட்டில் உள்ளதா? நாம் நம் மனதைக் கையாளுகின்றோமா அல்லது நிகழ்வுகளின் ஆளுமையில் நம் மனதினை விட்டு அதன் வழி செல்கின்றதா? இவ்வினாக்களுக்கு விடையளிக்க நாலடியார்ப் பாடலைப் பார்ப்பதற்கு முன், ஒரு சில நாட்களுக்கு முன் மின் அஞ்சல் வழி வந்த ஒரு சிறு கதையினைப் பார்ப்போம். இதனை கூகிள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை அவர்கள் தன் பேச்சில் கூறியிருக்கிறார்.



“ஒரு உணவகம். அங்கு ஒரு பெண் சாப்பிட வந்தாள். அப்பொழுது அங்கு ஒரு கரப்பான் பூச்சி வந்து அவள் மேல் விழுந்தது. துள்ளிக் குதித்தாள் அந்தப் பெண். அவள் துள்ள அந்த கரப்பான் பூச்சி இன்னொரு பெண் மேல் விழ அவளும் துள்ள இவ்வாறு அந்த இடம் அமளியில் மூழ்கியது. இதனைப் பார்த்து, அங்கு வந்த சிப்பந்தி, அந்த கரப்பான் பூச்சியை எந்த வித சலமும் இல்லாமல் எடுத்து வெளியே கொண்டு போய் விட்டார். கரப்பான் பூச்சி ஒன்று தான். அதனை ஒவ்வொருவரும் கையாண்ட விதம் வேறு.”

இது போன்று நமக்கு நடக்கும் நிகழ்வுகளுக்கு நாம் எவ்வாறு எதிர்வினயாற்றுகின்றோம் என்பதில் தான் நம் மன நிலை நிர்ணயிக்கப் படுகின்றது. இதனை இங்கு அழகாக விளக்குகின்றது இந்தப் பாடல்.

ஒருவர் ஒரு காரியத்தை முடிக்க, தனது மனத்தை ஒருமைப்படுத்தி, வேலை செய்து வருகின்றார். அவ்வாறு செய்யும்பொழுது, அவமதிப்புகள், ஆம் ஒன்றல்ல இரண்டல்ல, பல அவமதிப்புகள் சேர்ந்து வரும் பொழுது, தனது பாதங்களை தாம் செல்லும் வழியில் இருந்து தவற விடாமல், தன் வினைகளை முடிப்பர். அவ்வாறு திண்மையுள்ளம் கொண்டவர், சிறு விடயங்கள் நடக்கும் பொழுது, அதன் காரணமாக கோபம் அடைந்து , அதன் காரணமாக சிறப்புமிக்க தமது உயிரின் பகுதியினை இழக்கமாட்டார்கள்.

கோபம் அடைவதால் நம் உளநிலை பாதிக்கப் பட்டு அதனால் உடல் நிலை பாதிப்பப்பட்டு, அதன் விளைவாக உயிர்நிலை பாதிக்கப்படுவதை மிகவும் அருமையாக எடுத்தியம்புகிறது இப்பாடல்.



பாடல்:
தண்டாச் சிறப்பின்தம் இன்னுயிரைத் தங்காது
கண்டுழி யெல்லாம் துறப்பவோ - மண்டி
அடிபெயரா தாற்ற இளிவந்த போழ்தின்
முடிகிற்கும் உள்ளத் தவர்.

பதம் பிரித்த பாடல்:
தண்டாச் சிறப்பின் தம் இன் உயிரைத் தாங்காது,
கண்டுழி எல்லாம் துறப்பவோ-மண்டி,
அடி பெயராது, ஆற்ற இளி வந்த போழ்தின்
முடிகிற்கும் உள்ளத்தவர்?

அருஞ்சொற்பொருள்:
தண்டா - அழியாத, நீங்காத
உழி - சிறிய விடயங்கள்
மண்டி - அடர்ந்து
இளி - அவமதிப்பு
முடிகிற்கும் - முடிக்கும்


இது வரை வெளியிடப்பட்ட பாடல்கள் மற்றும் கருத்துகளின் தொகுப்பினைப் படிக்க: http://thamizhvaan.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக