புதன், 1 ஏப்ரல், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 56

இல்லறம் இத்தகையது, துறவறம் இத்தகையது என்று மிகவும் நன்றாக வரையறுத்துள்ளனர் நம் முன்னோர். துறவறத்தை மேற்கொண்டவர்கள் இவ்வுலகின் பிடிப்பில் இருந்து விலக, பற்றுகளில் இருந்து விலக, அவர்கள் கையாளவேண்டிய வழிமுறைகள் நம் இலக்கியத்தில் சொல்லப்பட்டுள்ளன. பற்றற்ற நிலையை ஒருவர் அடையவேண்டுமானால், அவர் இவ்வுலகியலின் கட்டில் இருந்து விடுபட வேண்டும். கட்டுகள் எவை எவை? அவை ஏன் கட்டுகளாகின்றன? நம்மைக் கட்டிப் போடும் பலவித கட்டுகளில் ஒன்றைப் பற்றி பேசுகின்றார் இந்த நாலடியார்ப் புலவர்.



இல்லறத்தில் வாழும் மனிதருக்கு நடக்கும் நிகழ்வு, ஒருவரை திருமணம் செய்துகொள்வது. அவ்வாறு திருமணம் செய்துகொண்ட தன்னுடைய இல்லாள் (இணையர்), மாட்சிமை பொருந்திய நபராக இல்லாமலோ அல்லது மக்கட்பேறு இல்லாமலோ இருக்க வாய்ப்புண்டு, அவ்வாறு நிகழுமானாலும், திருமணம் செய்துகொண்டவன் தன் இணையாளை விட்டுவிடக் கூடாது. இல்லறத்தின் இந்த நியதியை புரிந்துகொண்ட மேலான ஒழுக்கமுடைய கற்றறிந்த மக்கள், தாம் துறவறம் மேற்கொள்ள திருமணம் தடையாக இருக்கும் என்று உணர்ந்து, அதில் இருந்து விலகி நிற்பர்.

பாடல்:

மாண்ட குணத்தொடு மக்கட்பே றில்லெனினும்
பூண்டான் கழித்தற் கருமையால் - பூண்ட
மிடியென்னும் காரணத்தின் மேன்முறைக் கண்ணே
கடியென்றார் கற்றறிந் தார்.

பதம் பிரித்த பாடல்:
'மாண்ட குணத்தொடு மக்கட் பேறு இல் எனினும்,
பூண்டான் கழித்தற்கு அருமையால், பூண்ட
மிடி என்னும் காரணத்தின், மேன்முறைக்கண்ணே
கடி' என்றார், கற்று அறிந்தார்.

அருஞ்சொற்பொருள்:

மாண்ட - மாண்புமிக்க
பூண்டான் - திருமணம் செய்து கொண்டவன்
மிடி - துன்பம்
மேன்முறை - மேலான ஒழுக்கமுடைய

கடி - விலக்கு  

1 கருத்து: