செவ்வாய், 31 மார்ச், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 55

ஆழ்ந்த சிந்தனையில் நாம் மூழ்கும் பொழுது, நாம் உள்நோக்கத் துவங்கிவோம். நமக்குள் நாமே நாம் வினாக்கள் கேட்போம். “நான் என் அவ்வாறு பேசினேன்? அங்கு அதனை நாம் அவ்வாறு செய்திருக்கலாமோ?” - இது போன்ற வினாக்கள் கொண்டு சுய வேள்வி நடத்தும் போது, நம் மனதின் நிலை, நம் மனதின் வழி  அறிவின் பால் பட்டதா, அல்லது புலன்களின் ஆளுமையில் உணர்ச்சியின் பால் பட்டதா என்ற ஆய்வும், ஆய்வின் முடிவில் நம் மனதிற்கு நாம் கட்டளையிடுவதும் அவ்வப்போது நடப்பது. இது போன்ற ஒரு சுய ஆய்வினை, சுய வேள்வியினை இங்கு நம் முன் வைக்கிறார் இந்த நாலடியார்ப் புலவர்.  



இளமை என்பது முடியக் கூடியது. அவ்வாறான இளமை முடிய முடிய, நாம் மூப்படைந்து, அதனால் நாம் நோய்வாய்ப்படுவதும் இயற்கை. என்னுடன் சேராது புலன்களின் வழி செல்லும் என் மனமே, நிலையாமை உண்மையை உணர்ந்து, இனியாவது நாம் நல்ல வழியில் செல்ல, துணிவு கொண்டு என்னுடன் வருவாயா?

இங்கு இளமை வீணாக கழிந்தது என்ற குறிப்பின் வழி பயனுள்ள செயல்கள் அற்று புலன்களின் ஆளுமையில் இளமைக் காலம் கழிந்தது என்று குறிப்பால் உணர்த்தப் படுகிறது. இப்பாடலின் மற்றுமொரு அழகு  “ என் நெஞ்சே!” என்று தனித்துத் துவங்கி, பின் “நமக்கு" என்று இணைத்து முடித்தது.

பாடல்:
கொன்னே கழிந்தன் றிளமையும் இன்னே
பிணியொடு மூப்பும் வருமால் - துணிவொன்றி
என்னொடு சூழா தெழுநெஞ்சே போதியோ
நன்னெறி சேர நமக்கு.

பதம் பிரித்த பாடல்:
கொன்னே கழிந்தன்று இளமையும்! இன்னே
பிணியொடு மூப்பும் வருமால்;-துணிவு ஒன்றி,
என்னொடு சூழாது, எழுநெஞ்சே!-போதியோ,
நல் நெறி சேர, நமக்கு?

அருஞ்சொற்பொருள்
கொன்னே - வீணாக
போதியோ - போகிறாயோ

இது வரை வெளியிடப்பட்ட பாடல்கள் மற்றும் கருத்துகளின் தொகுப்பினைப் படிக்க: http://thamizhvaan.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக