புதன், 11 மார்ச், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 39

#நாளுமொருநாலடியார் #நாலடியார்

அவன் தன் குழந்தையுடன் விளையாட்டு மைதானத்திற்கு வந்திருந்தான். மாலையின் இளம் வெப்பத்தில், காற்று மெதுவாக வீச, அந்தப்  பொழுது இனிதாக இருந்தது. குழந்தையை ஊஞ்சலில் வைத்து ஆட்டி விட்டான். ஊஞ்சல் மேலே போவதும் கீழே வருவதுமாக இருந்தது. மேலே செல்வது எல்லாம் கீழே வருமா? அனைத்து நிகழ்வுக்கும் எதிர் நிகழ்வு உண்டா? முன்னே செல்லம் பொருள் பின்னே வந்தாக வேண்டுமா? சிந்தனைக்கு வித்திட்டன அந்த வினாக்கள். சிந்தித்துப் பார்த்ததன் முடிவில் அவன் ஒரு முடிவுக்கு வந்தான். அனைத்து நிகழ்வுக்கும் எதிர் நிகழ்வு இருக்கவேண்டும் என்பது இல்லை. அதற்கு எடுத்துக் காட்டாக அவனுக்கு ஒரு நாலடியார்ப் பாடல் நினைவில் வந்தது. அந்தப் பாடல் நேரம் மற்றும் வாழ்நாள் எவ்வாறு ஒரு திசை மட்டும் நோக்கிச் செல்கிறது என்பதைப் பற்றி உணர்த்தியிருக்கும்.



"நாள் தோறும் காலம் (நாட்பொழுது) வந்து தோன்றி மறைவதைப் பார்த்தும், அதனை உணராமல், அறச் செயல்களை செய்யாமல் நம் நேரம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று நினைத்து இன்பச் செயல்கள் மட்டுமே செய்யும் மாந்தரும் இருக்கின்றனர். அம்மாந்தர்கள் நாள்தோறும் தம்முடைய வாழ்நாள் அதிகரித்து ஆயுள் பெருகிக் கொண்டு இருக்கும் என்று நினைத்து வாழ்நாளின் நிலையாமையை உணராதவர்கள் ஆவர்." பாடலின் கருத்தை அசைபோட்ட அவன் அதன் உட்கருத்தை மீண்டும் உள் வாங்கிக்கொண்டான்: இங்கு நமக்குள்ள காலம் மிகச் சிறிது. அந்தக் காலத்தில் அறச் செயல்களும் செய்து இன்புறுவோமாக.

பாடல்:

வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்.

பதம் பிரித்த பாடல்:

வைகலும் வைகல் வரக்கண்டும், அஃது உணரார்,
வைகலும், வைகலை வைகும் என்று இன்புறுவர்-
வைகலும் வைகல் தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்து உணராதார்.

அருஞ்சொற்பொருள்: 

வைகலும் - நாள்தோறும்
வைகல் - காலம்
வைகும் - நிலைத்திருக்கும்

1 கருத்து:

  1. ஆஅ..!
    பள்ளியில் சொற்பொருள் பின்வருநிலை அணிக்குப் படித்த பாட்டு..!

    நாலடியாரிலா இருக்கிறது.

    உண்மையில் இது தெரிய இவ்வளவு காலம் வைகிற்று.:))

    பகிர்ந்தமைக்கு நன்றி அய்யா!!

    பதிலளிநீக்கு