சனி, 21 மார்ச், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 48


மெல்லோட்டம் மற்றும் மெது நடையுடன் அவள் இயற்கையை உள்வாங்கிகொண்டிருந்தாள். பாதையைக் கடக்கும் பொழுது ஒரு வண்டி பாதையின் ஓரமாக நின்றிருந்தது. வண்டியின் அச்சு முறிந்ததால், அவ்வண்டியின் பயணம் அன்று முடிந்திருந்தது. உண்மை தான். அச்சு இருக்கும் வரையில் தான் வண்டியின் இயக்கம். அந்தக் காட்சியைக் கண்ட அவளுக்கு நாலடியார்ப் பாடல் நினைவுக்கு வர, அதைப் பற்றி சிந்திக்கத் துவங்கினாள்.


நம் உடம்புக்கும் உயிருக்குமான உறவு, ஒரு வண்டிக்கும் அவ்வண்டியின் அச்சுக்குமான உறவுக்கு இணையானது. அச்சில்லாத வண்டி முச்சாணும் ஓடாது என்பது போல் உயிரற்ற உடலின் இயக்கம் உடனே நின்றுவிடும். அவ்வாறு உயிரிழந்த உடம்பின் நிலை எவ்வாறு இருக்கும்? அவ்வுடம்பு இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்படும். அவ்வுடம்பினை வலிமையான பெண் மற்றும் ஆண் கழுகுகள் புரட்டி குத்தி உணவாகக் கொள்ளும். இதனை அறியாமல் தானோ அறிவற்ற மாந்தர் உடம்பில் பூசப் படும் சந்தனம், மற்றும் அணியப்படும் மாலையையும் கண்டு இவ்வுடம்பினைப் பாராட்டுவர்?

நாலடியார் பாடலின் ஆழமான கருத்தினை மனதினில் அசைபோட்டுக் கொண்டே இல்லம் திரும்பினாள் அவள்.

உட்கருத்து: உடம்பைப் பாராட்டாது உயிருக்கு பயனளிக்கும் அறச் செயல்களை செய்வோமாக.

பாடல்:
பண்டம் அறியார் படுசாந்தும் கோதையும்
கண்டுபா ராட்டுவார் கண்டிலர்கொல் - மண்டிப்
பெடைச்சேவல் வன்கழுகு பேர்த்திட்டுக் குத்தும்
முடைச்சாகா டச்சிற் றுழி.

பதம் பிரித்த பாடல்

பண்டம் அறியார், படு சாந்தும் கோதையும்
கண்டு, பாராட்டுவார் கண்டிலர்கொல்-மண்டிப்
பெடைச் சேவல் வன் கழுகு பேர்த்து இட்டுக் குத்தல்,
முடைச் சாகாடு அச்சு இற்றுழி?

அருஞ்சொற்பொருள்

பண்டம் : உணவுப் பொருள் ; இங்கு உடம்பைக் குறிக்கிறது.
சாந்து : சந்தானம்
கோது : மாலை
கண்டிலர்கொல் : அறிந்திலர் போலும்
மண்டி - சேர்ந்து
பேர்த்து - புரட்டி
முடை - புலால் நாற்றம்
இற்று - முறிந்து

2 கருத்துகள்: