வியாழன், 5 மார்ச், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 36

நமது வாழ்வில் பலவற்றை பற்றி நாம் சிந்திப்போம். பல்வேறு நிகழ்வுகளை மையமாக வைத்து நம் சிந்தனைகள் ஓடிக் கொண்டிருக்கும். நாம் முதன் முதலில் மிதிவண்டி வாங்கியது, முதன் முதலில் தனியாகப் பேருந்தில் சென்றது, கல்லூரியின் முதல் நாள், வேலை அல்லது தொழில் துவங்கிய நாள் .. இவ்வாறு பல நிகழ்வுகள். நாம் இந்த உலகை விட்டு செல்லப்போகும் நாளைப் பற்றி என்றாவது யோசித்திருகின்றோமா? ஒரு சில சமயம் யோசித்திருக்கலாம். ஆனால் அவ்வாறு யோசித்தாலும் வெறும் சில நொடிகள் யோசித்துவிட்டு மற்ற சிந்தனைகளுக்கு தாவி விடுவோம். இதனை உணர்ந்த நாலடியார்ப் புலவர் இப்பாடலின் வழி நமக்கு ஒரு செய்தி சொல்கிறார். என்னவென்று பார்ப்போமா?


நாம் இவ்வுலகை விட்டு விலகுவது இன்றோ, அன்றோ, என்றோ என்று நினைக்காமல் நம் உயிரை எடுத்துச் செல்ல கூற்றுவன் நமக்கப் பின்னால் என்றும் இருக்கின்றான் என்று எண்ணி, தீய செயல்களை உடனே விட்டு விட்டு, மாண்பு மிக்க நல்லவர்கள் போற்றும் நல்ல செயல்களை நம்மால் கூடிய வரையில் செய்வோமாக.  

பாடல்:
இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது
பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால்
மருவுமின் மாண்டார் அறம்.

பதம் பிரித்த பாடல்:

'இன்றுகொல்? அன்றுகொல்? என்றுகொல்?' என்னாது,
'பின்றையே நின்றது கூற்றம்' என்று எண்ணி,
ஒருவுமின், தீயவை; ஒல்லும் வகையால்
மருவுமின், மாண்டார் அறம்.

அருஞ்சொற்பொருள்:
பின்றையே - பின்னால் 
ஒருவுமின் - விட்டு விடுங்கள் 
ஒல்லும் வகையால் - முடிந்த வரை 
மருவுமின் - சேருங்கள் 
மாண்டார் - மாண்பு மிக்கவர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக