வியாழன், 26 மார்ச், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 52

உலகில் பிறந்த ஒவ்வொரு உயிர் தாங்கிய உடம்பும் ஒரு நாள் இயற்கை எய்துவது என்பது மறக்கமுடியாத, மறுக்கமுடியாத உண்மை. ஏழையாக இருக்கலாம், செல்வந்தராக இருக்கலாம், ஆணாக இருக்கலாம், பெண்ணாக இருக்கலாம், நகரத்தில் வாழலாம், கிராமத்தில் வாழலாம். எப்படி எங்கு வாழ்ந்தாலும் இறப்பது என்பதனை தவிர்க்க முடியாது. நோயினால் பாதிக்கப்படுவது, முதியவராக வயது கடப்பது, என்று பல காரணங்களால் நாம் இறக்க நேரிடுவது இவ்வுடம்பின் நிலையாமையை உறுதி படுத்துகின்றது. நிலையாமை என்பது நிலையான உண்மை. சரி, அதனை உணர்ந்து நாம் செய்யவேண்டியது என்ன? வினாவிற்கு அழகாக விடையளிக்கிறது இந்த நாலடியார்ப் பாடல்.




உண்மை அறிவை அறிந்த பெரியவர்கள், தங்களுடைய கருமங்களை, அதாவது நற் செயல்களைச் செய்வர். அவ்வாறு நற்செயல்கள் செய்யாமல், முடிவு இல்லாத, கற்று முடிக்க முடியாத, இலக்கணம் மற்றும் சோதிட நூல்களை கற்க முயன்று அதனைப் பற்றியே பேசிக் கொண்டு இருக்கும் மாந்தர்களை விட அறிவற்ற பேதையர் இவ்வுலகில் இல்லை.

பாடல்:

நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்
தலையாயார் தங்கருமம் செய்வார் - தொலைவில்லாச்
சத்தமும் சோதிடமும் என்றாங் கிவைபிதற்றும்
பித்தரின் பேதையார் இல்.

பதம் பிரித்த பாடல்

நிலையாமை, நோய், மூப்பு, சாக்காடு, என்று எண்ணி,
தலையாயார் தம் கருமம் செய்வார்; தொலைவு இல்லாச்
சத்தமும் சோதிடமும் என்று ஆங்கு இவை பிதற்றும்
பித்தரின் பேதையார் இல்.

அருஞ்சொற்பொருள்

தொலைவு - இங்கு முடிவு என்னும் பொருளில் பயன்படுத்தப் பட்டது.
சத்தம் - இலக்கண நூலைக் குறிக்கின்றது
பிதற்றும் - அறிவற்ற வார்த்தைகளை அடிக்கடி சொல்லுதல்
பித்தர், பேதையார் - அறிவற்றவர்

2 கருத்துகள்:

  1. நிலையாமை நின் முன் வருமுன்
    ஒன்றே செய்! நன்றே செய்!! அதுவும் இன்றே செய்!!! - கோவி

    பதிலளிநீக்கு