ஞாயிறு, 1 மார்ச், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 32

இவ்வுலகில் நம் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பயன்படுவதற்காக செல்வம் ஈட்டவும் சேர்க்கவும் துவங்குகிறோம். இப்படித் துவங்கும் செலவம் ஈட்டும் செயல் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை ஆட்கொள்ள ஆரம்பிக்கறது. நாம் நன்றாக இருக்கின்றோம், இன்னும் நன்றாக இருப்போம் என்று எண்ணி செல்வத்தின் மீது அதிக பற்று வைத்து அதனை ஈட்டுவதே நம் வாழ்வின் முழு குறிக்கோளாக மாறிவிடுகிறது. இதனால் நாம் அறம் செய்வதையும் மறந்து, அறம் செய்வதற்கு என்ன அவசரம், இன்றா இறக்கப் போகிறோம் என்று நினைத்து வாழ்கின்றோம்.


மேற்சொன்ன சிந்தனைகள் கொண்டு, ஓயாமல், என்றுமே செல்வம் ஈட்டுவதற்கு உழைக்கும் ஒரு மாந்தர் , இப்பொழுது நல்லபடி வாழ்ந்தாலும், அவருடைய வாழ்நாட்கள் நிறைவு பெற்று, ஓர் நாள் இவ்வுலகை விட்டு செல்லும் நிலை வரும். அப்பொழுது வினாக்கள் சில எழும். நாம் இது வரை நல்ல செயல்கள் என்ன செய்தோம்? எவருக்கு உதவினோம்? அறச் செயல்கள் செய்தோமா? வினாக்கள் எழலாம். விடை கூறவோ அல்லது விடை கூறமுடிவில்லையே என்று நினைத்து நல் வினைகள் செய்யவோ நேரம் இருக்காது.

உட்கருத்து: உலகியல் வாழ்கைக்கு செல்வம் தேவை. ஆனால் செல்வம் ஈட்டுவது மட்டுமே வாழ்க்கை என்று எண்ணாமல் அறச் செயல்களும் செய்வோமாக. 

பாடல்:
 
ஆவாம் நாம் ஆக்கம் நசைஇ அறமறந்து
போவாம்நாம் என்னாப் புலைநெஞ்சே - ஓவாது
தின்றுஞற்றி வாழ்தி எனினும்நின் வாழ்நாள்கள்
சென்றன செய் துரை.

பொருளறிந்து படிக்க பதம் பிரித்த பாடல்:

'ஆவாம் நாம், ஆக்கம் நசைஇ; அறம் மறந்து,
போவாம் நாம்' என்னா,-புலை நெஞ்சே!-ஓவாது
நின்று உஞற்றி வாழ்தி எனினும், நின் வாழ்நாள்கள்
சென்றன; செய்வது உரை.

அருஞ்சொற்பொருள்: 

ஆவாம் - என்றும் இருப்போம் 
நசை - விருப்பம், ஆசை 
போவாம் - போக மாட்டோம் 
என்னா - என்று எண்ணி 
புலை - இழிவு 
ஓவாது - இடைவிடாது 
உஞற்றி - செயலாற்றி ; முயற்சி செய்து 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக