சனி, 28 பிப்ரவரி, 2015

நாளும் ஒரு நாலடியார்: பாடல் 31

மிகவும் உயரமாக பார்ப்பதற்கு கண்ணைக் கவரும் வண்ணம் அமைந்திருந்தது அந்த மாளிகை. அந்த மாளிகையின் உள்ளே இருந்த மாந்தர்கள் நல்ல வசதிகள் கொண்டு வாழ்வினை மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். அந்த மாளிகையில் நாம் செல்ல முடியுமா? அப்படிச் செல்வதற்கு என்ன தகுதி வேண்டும்? ஏன் நாம் மட்டும் அதனுள் செல்ல முடியவில்லை? இவ்வாறான வினாக்களுடன் ஒருவர் அந்த மாளிகையினை வெளியில் நின்று அண்ணாந்து பார்த்தக் கொண்டிருந்தார்.

இவ்வுலகில் நடக்கும் எந்த ஒரு காரியத்திற்கும் காரணம் இருக்கும். பகலவன் உதித்த காரணத்தால் ஒளியும் வெப்பமும் பூமியை அடைந்தது. காற்று வீசியதால் மரம் அசைந்தது. இவ்வாறு ஒவ்வொரு இயற்கை நிகழ்வுக்கும் காரணம் இருப்பது போல் மேற்கண்ட மாந்தர் வெளியில் இருந்து மாளிகையினை நோக்கி பார்த்து உள்ளே செல்ல முடியாமல் இருப்பதைக் கண்ட நாலடியார்ப் புலவர், இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று சிந்திக்கத் துவங்கினார். முற்பிறவியில் மற்றும் இந்தப் பிறவியிலும் அறம் செய்யாமல் இருப்பதனால் தான் அவர் இவ்வாறு வெளியில் இருந்து பார்க்கவேண்டிய நிலை வந்தது என்று முடிவுக்கு வந்து, காட்சியையும் அதற்கான காரணத்தையும் பாடலாக வடித்தார்.  

முற்பிறப்பினை மேலை என்று குறிப்பிட்ட புலவர் இப்பிறப்பிலும் அறம் செய்வதைக் குறிக்க, "தவம் செய்யாதார்" என்று குறிப்பிட்டார். 

பாடல்: 

அகத்தாரே வாழ்வார்என் றண்ணாந்து நோக்கிப்
புகத்தாம் பெறாஅர் புறங்கடை பற்றி
மிகத்தாம் வருந்தி இருப்பாரே மேலைத்
தவத்தால் தவஞ்செய்யா தார்.

பொருளறிந்து படிக்க பதம் பிரித்த பாடல்: 

'அகத்து ஆரே வாழ்வார்?' என்று அண்ணாந்து நோக்கி,
புகத் தாம் பெறாஅர், புறங்கடை பற்றி,
மிகத் தாம் வருந்தியிருப்பரே-மேலைத்
தவத்தால் தவம் செய்யாதார்.

அருஞ்சொற்பொருள்:

புகத் தாம் - தாம் நுழைய 
புறங்கடை - வெளியில் 
தவம் - இங்கு அறம் செய்தலைக் குறிக்கிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக