செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

நாளும் ஒரு நாலடியார்: பாடல் 28

வான் தொடுமளவுக்கு உயர்ந்த மலை. அம்மலையின் உச்சிக்கருகில் அழகாக தவழ்ந்து வந்தன அந்த மேகங்கள். அவற்றை பார்த்து ரசித்த வண்ணம் மெல்லோட்டம் சென்றான் அவன். மெல்லோட்டம் செல்லும்போது அவனது மேனியைத் தழுவியது குளிர்ந்த காற்று. மழை வரப்போகிறதோ என்று நினைத்த வண்ணம் அவன் ஓட்டத்தைத் தொடர்ந்தான். ஒரு சுற்று முடித்து மறு சுற்றுத் துவங்கும் பொழுதே மழை பொழியத் துவங்கிவிட்டது. அவன் மெல்லோட்டம் முடிவதற்கும் அங்கு அவன் பார்த்து ரசித்த மேகங்களில் சில பூமி நோக்கிய தங்களது பயணத்தை முடிப்பதற்கும் சரியாக இருந்தது. ஆம், அம் மலைகளின் மேல் அழகாக தவழ்ந்த மேகங்கள் நீராக மாறி மறைந்து விட்டன.


மேற்கண்ட காட்சியில் உள்ள மேகங்களை உவமையாகக் கூறி இந்த நாலடியாரை இயற்றிய புலவர் கூறும் கருத்து: மறைந்த மேகங்கள் போன்று , நிலையாக இல்லாமல், நம் உடலும் ஒரு நாள் மறையும். அதனால் நல்ல நோயற்ற உறுதியான உடலைக் கொண்டவர்கள், அந்த உடல் உறுதியாக இருக்கும் பொழுதே அதனைக் கொண்டு அறச் செயல்கள் செய்து அதன் பயனை அடையவேண்டும். 

பாடல்: 

யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற
யாக்கையா லாய பயன்கொள்க ;- யாக்கை
மலையாடு மஞ்சுபோல் தோன்றிமற் றாங்கே
நிலையாது நீத்து விடும்.

பொருளறிந்து படிக்க சொல் பிரித்த பாடல் :

யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர், தாம் பெற்ற
யாக்கையால் ஆய பயன் கொள்க-யாக்கை
மலை ஆடும் மஞ்சுபோல் தோன்றி, மற்று ஆங்கே
நிலையாது நீத்துவிடும்!

அருஞ்சொற்பொருள்:

யாப்பு - உறுதி - நோயற்ற திடமான நிலையைக் குறிக்கிறது. 
மஞ்சு - மேகம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக