திங்கள், 16 பிப்ரவரி, 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 16


அறிவுள்ள மாந்தரிடம் பல நல்ல பண்புகள் இருக்கும். பல நூல்கள் கற்று கல்வியறிவு மிகுந்து இருக்கும். பல செயல்கள் செய்து பட்டறிவும் மிகுந்திருக்கும். ஆனால் அவரிடம் இல்லாதன எது? பல தேவையற்ற விடயங்கள் இல்லாமல் இருக்கலாம். அதில் மிக முக்கியமானதாக நம் முன்னோர் கருதியது இளமைக் காலத்தில் அறியாமையால் நிலையில்லாத சிற்றின்பத்தை அடைய விரும்பாதது

இதனை விளக்குவதற்கு விவரிக்க பட்டகாட்சி:

வெப்பம் நிறைந்த இடம் அது. அங்கு ஒரு வெறியாட்டம் ஆடும் நபர். அவர் கையில் இலை மற்றும் மலர்கள் இணைத்துக் கட்டிய மாலையுடன் நின்று கொண்டிருக்கிறார். அருகில் அந்த மாலையைப் பெற்று பலியாகப்போகும் ஆடு நின்று கொண்டிருக்கிறது. தாம் தம் உயிரை இழக்கப்போகிறோம் என்று அறியாமல் அந்த ஆடு வெறியாட்டம் ஆடும் நபரின் கையில் இருந்த மாலையினை உணவாக உண்டு மகிழ்ச்சி அடைகிறது. இம்மகிழ்ச்சி போன்ற சிற்றின்பத்தை அறிவுள்ள சான்றோர் விரும்ப மாட்டார்கள் என்கின்றது இந்த நாலடியார்ப் பாடல்.

பாடல்

வெறியயர் வெங்களத்து வேல்மகன் பாணி
முறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க
மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி
அறிவுடை யாளர்கண் இல்.

அருஞ்சொற்பொருள்:

வெறி அயர் - வெறியாட்டம் ஆடுகிற
வெங்களம் - வெப்பமான இடம்
பாணி - பல பொருட்கள் கொண்டது. இங்கு கை என்ற பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளது.
முறி - தளிர்கள்
ஆர் - நிறைந்த
கண்ணி - மாலை ; நறுங்கண்ணி - வாசனையுள்ள மாலை
மறி - ஆடு
குளகு - உணவு
மன்னா - நிலையில்லா




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக