வியாழன், 5 பிப்ரவரி, 2015

நாளும் ஒரு ‪நாலடியார்‬: பாடல் 8


இருண்ட மாலைப் பொழுது அது. மாலைப் பொழுதின் இருளுடன் இணைந்தது கார்மேகத்தின் இருள். மேகங்கள் மறைத்ததினால் விண்மீன்கள் எதுவும் கண்ணுக்கு புலப்படவில்லை. கருமேகங்கள் நகரத்துவங்கின. இடி இடித்தன. அந்தக் கருமைப் போர்வையில் ஒரு கிழிசல். கண்ணைப் பறிக்கும் வெண்மை. ஒரு நொடியில் இவ்வுலகைக் காட்டி மறைந்தது அந்த மின்னல்.
அவ்வகை மின்னலுக்கு எது ஒப்பிடப் படுகிறது? செல்வம் பல பெற்ற செல்வந்தர் "தாம் செல்வந்தர், தம்முடைய செல்வம்" என்று எண்ணி, பின் விளைவுகளையோ அல்லது பலரால் நம்பப்பட்ட மறு உலகத்தை அல்லது பிறவியை நினைக்காமல் இறுமாப்பு அடையும் செல்வந்தரின் செல்வத்திற்கு ஒப்பிடப் படுகிறது அந்த மின்னல். அந்த செல்வந்தர் நினைக்கும் முன்னரே அச்செல்வம் அவரை விட்டு பிரியும் தன்மையைக் கொண்டது.
பாடல் 8:
செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி எண்ணாத
புல்லறிவாளர் பெருஞ்செல்வம் - எல்லில்
கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுபோல் தோன்றி
மருங்கறக் கெட்டு விடும்.
அருஞ்சொற்பொருள்:
செல்வுழி - செல் உழி - செல்லும் இடம்
எல்லில் - இரவில்
கொண்மூ - மேகம்
மருங்கு - இடம்
அற - முழுமையாக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக