வியாழன், 19 பிப்ரவரி, 2015

நாளும் ஒரு நாலடியார்: பாடல் 23

நம் முன்னோர்களின் வாழ்வில் ஓர் நாள்....
பெரியதொரு அவை. தென்னங்கீற்றில்  உண்டான தோரணங்கள், மலர் மாலைகள் என்று அந்த அவை மிகவும் அழகாக அலங்கரிக்கப் பட்டு இருந்தது. ஊர்ப் பெரிரவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என்று பலரும் அந்த அவைக்குள் நுழைந்து, இன்முகத்துடன் வரவேற்கப்பட்டு அந்த அவையில் சென்று அமர்ந்தார்கள். அந்த அவை அதிரும் வகையில் அங்கு திருமணப் பறை ஒலித்தது. அப்பறையின்  ஒலி அந்நிகழ்வை ஊருக்கு உணர்த்தியது. ஆம் அங்கு நம் முன்னோர் இருவருக்கு அன்று திருமணம் நல்ல படி நடந்தது.

அன்று துவங்கிய அத்தம்பதியினர் வாழ்வில் காலம் செல்லச் செல்ல பல நிகழ்வுகள் நடந்தேறின. பிறகு ஒரு நாளில் மங்கல நிகழ்வை ஊருக்கு அறிவிக்க பயன்பட்ட பறை அவர்கள் காலமான நிகழ்வை அறிவிக்க பயன்பட்டது. இது நாள் தோறும் நடக்கும் இயற்கை நிகழ்வு என்பதை உணர்ந்த மாட்சிமை வாய்ந்த பெரியவர்கள், அவர்களுக்கு கிடைத்த வாழ்நாட்களில் நற்செயல்கள் மற்றும் அறச்செயல்கள் செய்து அறம் சார்ந்த வழியில் பயணிப்பார்கள்.

இக்கருத்தை விளக்கும் பாடல்:

மன்றம் கறங்க மணப்பறை யாயின
அன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப் -பின்றை
ஒலித்தலும் உண்டாமென் றுய்ந்துபோம் ஆறே
வலிக்குமாம் மாண்டார் மனம்.

பொருளறிய சொல் பிரித்த பாடல்:

'மன்றம் கறங்க மணப் பறை ஆயின,
அன்று அவர்க்கு ஆங்கே, பிணப் பறை ஆய், பின்றை
ஒலித்தலும் உண்டாம்' என்று, உய்ந்துபோம் ஆறே
வலிக்குமாம்-மாண்டார் மனம்.

அருஞ்சொற்பொருள்:

மன்றம் - அவை, இங்கு திருமணம் நடக்கும் பேரவையைக் குறிக்கிறது
கறங்க - ஒலித்தல்
ஆறே - வழி
வலிக்குமாம் - துணிந்து நிற்குமாம்
மாண்டார் - மாட்சிமை மிகுந்தவர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக