வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

நாளும் ஒரு ‪நாலடியார்‬: பாடல் 24

காலை எழுந்து மெல்லோட்டம்.. பின்பு கடன்கள் முடித்து மகிழுந்துவில் அலவலகத்திற்கு பயணம். வேலை விறுவிறுப்புடன் முடிய, அன்று மாலை ஒரு மெல்லிசை நிகழ்வு. அந்த நாளின் இடை இடையே சில உறவினர்களுடனும் சில நண்பர்களிடமும் தொலைபேசி வழியாக நலம் விசாரிப்பு. ஒரு நாள் என்பது பல வித நிகழ்வுகளை உள்ளடக்கிய கருவூலம். இந்நிகழ்வுகள் அனைத்தும் ஒருவரின் வாழ்வில் நடப்பதற்கு முக்கிய காரணம் நம் உடலில் உயிர் சேர்ந்திருப்பது தான்..
இவ்வாறு பல நிகழ்வுகளை நிகழ்த்திய உடலும் உயிரும் இயற்கையின் விதிப்படி ஒரு நாள் பிரியும். அவ்வாறு பிரிந்து விட்டால் என்ன நடக்கும்? நம் மீது அன்பைப் பொழிந்த உறவினர்களும் நண்பர்களும் கூடி, நம்மை நினைவில் நிறுத்தி வருத்தப் படும் வேளையில், காலமான நிகழ்வை தெரிவிக்க பறை ஒலிக்கப் படும். முதன் முறை ஒலித்துவிட்டு சிறிது நேரம் இடைவெளி விட்டு மீண்டும் பறை ஒலி. இவ்வாறு மூன்றாம் முறை பறை ஒலிக்கும் முன்னரே நம் உடல் துணியால் மூடப்பட்டு தீ சட்டியுடன் நம் உடலை நம் இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்வர். யார் எடுத்துச் செல்வார்கள்? இறந்தவரை இறக்கப் போகிறவர்கள் எடுத்துச் செல்வார்கள். எவ்வளவு செல்வம் வைத்திருந்தாலும், எத்தனை உறவினர் நண்பர்கள் இருந்தாலும், உடலை விட்டு உயிர் பிரிந்தவுடன், சிறிது நேரத்திலேயே நம் உடலை நாம் வாழ்ந்த இல்லத்தில் இருந்து எடுத்துச் சென்று விடுவார்கள்.
குறிப்பால் உணர்த்தப் படும் பொருள்: இறப்பது என்பது உறுதி. ஆதலால் இருக்கும் போதே நற்செயல்கள் செய்வோமாக.
பாடல்:
சென்றே எறிப ஒருகால் ; சிறுவரை
நின்றே எறிப பறையினை - நன்றேகாண்
முக்காலைக் கொட்டினுள் மூடித்தீக் கொண்டெழுவர்
செத்தாரைச் சாவார் சுமந்து.
பொருளறிந்து படிக்க சொல் பிரித்த பாடல்:
சென்றே எறிப ஒருகால்; சிறு வரை
நின்றே எறிப, பறையினை; நன்றேகாண்,
முக் காலைக் கொட்டினுள், மூடி, தீக் கொண்டு எழுவர்,
செத்தாரைச் சாவார் சுமந்து!
அருஞ்சொற்பொருள்
எறி - ஒலிப்பது
ஒருகால் - ஒரு முறை
வரை - இங்கு காலம் அன்னும் பொருளில் பயன்படுத்தப் பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக