திங்கள், 16 பிப்ரவரி, 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 19


அலுவலகத்தில் அன்று வேலைப் பளு அதிகமாக இருந்தது. மதிய உணவு முடித்துவிட்டு சிறிது நடந்துவிட்டு வரலாம் என்று அவன் அருகில் இருக்கும் பூங்காவிற்குச் சென்றான். பருவங்கள் மாறும் காலம் அது. அப்போதைய பகல் பொழுதில் காற்று மிகவும் பலத்துடன் கடுமையாக வீசியது. அதன் பலம் அதிகமாக இருந்ததால் மரங்கள் அனைத்தும் குலுங்கின. சில கனிகள் மரங்களில் இருந்தன. சில கனிகள் கீழே விழுந்தன. விழுந்தவை கனிகள் மட்டுமல்ல. இன்னும் கனியாத சில காய்களும் கீழே விழுந்தன. இயற்கையப் பார்த்து மகிழ்ந்து வந்த அவனுள்ளே எப்போதும் போல் எண்ணங்கள் வருவதும் போவதுமாக இருந்தன.

அவனுள் வந்த பல எண்ணங்களுள் ஒன்று நற்செயல் செய்வது பற்றியதாகும். நல்லது செய்ய வேண்டும் என்று தான் நினைத்த நாட்களை எல்லாம் சிந்தித்துப் பார்த்தான். பள்ளியில் இருக்கும் பொழுது கல்லூரிக் காலத்தில் தன் உழைப்பை வழங்கி உதவலாம் என்று நினைத்தது; பிறகு கல்லூரிக் காலத்தில் வேலைக்குச் சென்ற பிறகு செல்வம் சேர்த்து அறச்செயல்கள் செய்யலாம் என்று நினைத்தது; இவ்வாறு பல நினைவுகள். திடீரென அவனுக்குள் ஒரு பொறி தட்டியது. மரங்களில் இருந்து விழுந்த கனிகளும் காய்களும் அவனுக்குள் ஒரு உண்மையை உணர்த்தின. கனிகள் விழுவது எதிர்பார்த்ததுதான். ஆனால் காய்களும் விழுந்தனவே! இது போல் நம் வாழ்வு, முதுமையா அல்லது இளமையா என்று பார்க்காமல் என்று வேண்டுமானாலும் முடியலாம். அதனால் நல்ல அறச்செயல்கள் செய்வதற்கு "இது இளமைக் காலம் தானே. இன்னும் செல்வம் சேர்த்து நாம் பின்பு செய்யலாம்" என்று எண்ணாமல் இன்றே செய்யவேண்டும் என்ற முடிவோடு அவன் தன் நடையை முடித்தான்.

இதனை விளக்கும் நலடியார்ப் பாடல்:

மற்றறிவாம் நல்வினை யாம்இளையம் என்னாது
கைத்துண்டாம் போழ்தே கரவா தறஞ்செய்ம்மின்;
முற்றி யிருந்த கனியொழியத் தீவளியால்
நற்காய் உதிர்தலும் உண்டு

அருஞ்சொற்பொருள்:

மற்றறிவாம்- மற்று அறிவாம் - பின்பு செய்து கொள்ளலாம்
இளையம் - இளமைப் பருவம்
கைத்துண்டாம் - கைத்து உண்டாம் - கையில் இருக்கும் பொருள்
கரவாது - மறைக்காமல்
தீ வளியால் - கடும் காற்றினால்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக