வியாழன், 5 பிப்ரவரி, 2015

நாளும் ஒரு ‪நாலடியார்‬ : பாடல் 10

மலை சார்ந்த பகுதி அது. வானளவு எட்டும் மலைகள் கொண்ட அந்நாட்டின் அரசனைப் பார்த்து, அவன் அரண்மனையில் பாடி, பரிசு பெற ஒரு புலவர் வந்தார். அவர் அரசனைப் பார்த்து ஒரு காட்சியை விவரித்தார். " அரசே, ஒவ்வொரு மலரிலும் மிக மிகச் சிறிய துளியாய் தேன் இருக்கின்றது. இச்சிறு துளிகளை எல்லாம் தேனீ சேகரித்து தன் கூட்டில் கொண்டு போய்ச் சேர்த்து வைக்கின்றது. அவ்வாறு பல தேனீக்கள் சேர்ந்து கூட்டில் தேனைப் பெருக்குகின்றன. சேர்த்த தேனை அந்த தேனீக்கள் அருந்தாமல் மற்ற மிருகமோ அல்லது மனிதரோ பயன் படுத்துகின்றனர்." பிறகு அவர் மன்னனை நோக்கி "இந்த காட்சியப் பார்க்கும் பொழுது உனக்கு மனிதரில் எவ்வகை மனிதர் நினைவுக்கு வருகின்றனர்?" என்று கேட்டார். புலவரை வெல்வது கடினம் என்று நினைத்த அரசன், "நீங்களே சொல்லிவிடுங்கள் புலவரே!" என்று கூற, புலவர் விளக்கத் துவங்கினார்:
"மன்னரே, நல்ல துணி மணிகளை தான் உடுத்தாமலும், நல்ல உணவை தான் உண்ணாமலும், தமது உடம்பை அதனால் வருத்தியும், என்றும் அழியாத நல்ல செயல்களை செய்யாமலும், வறியவர்க்கு வேண்டியவற்றைக் கொடுக்காமலும், செல்வத்தைச் சேர்த்துவைக்கும் கருமி என்று அழைக்கப்படும் மனிதர் நினைவுக்கு வருகின்றனர். ஏன் என்றால், தேனீ எவ்வாறு தேனை இழக்கின்றதோ அதேபோல் அக்கருமி தன் செல்வத்தை இழப்பார்"
இதனை விளக்கும் நாலடியார் பாடல்:
உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும்
கெடாஅத நல்லறமும் செய்யார் - கொடாஅது
வைத்தீட்டி னார்இழப்பர், வான்தோய் மலைநாட!
உய்த்தீட்டும் தேனீக் கரி
அருஞ்சொற்பொருள் :
உடாஅதும் - உடுத்தாமலும்
செற்றும் - வருத்தியும்
உய்த்து - கொண்டுவந்து
ஈட்டும் - சம்பாதிக்கிற, சேர்த்துவைக்கிற


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக