திங்கள், 23 பிப்ரவரி, 2015

நாளும் ஒரு நாலடியார்: பாடல் 27

பல்வேறு மக்கள் வாழும் இவ்வுலகில் பல நல்லறிவாளர்கள் வாழ்ந்தனர். வாழ்கின்றனர். இனியும் வாழ்வர். இத்தகைய அறிவாளர்களில் மற்ற அறிவாளர்களுடன் சமமாக கருத முடியாத மெய் அறிவாளர்கள் யார்? அவர்களுடைய தகுதி என்ன? அவர்கள் மெய் அறிவாளர்கள் என்றழைக்கபட நூல்கள் பல கற்றனரோ? அவ்வாறென்றால் எந்த எந்த நூல்கள் படித்தால் மெய் அறிவாளர்கள் ஆகலாம்? இவ்வினாக்களுக்கு விடையளிக்கிறது இந்த நாலடியார்ப் பாடல்.


மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் தேங்கி இருந்த நீரில் மழை பெய்யப் பெய்ய நீர்க் குமிழிகள் உருவாவதும் மறைவதுமாய் இருந்தன. அந்த நீர்க் குமிழிகள் போல் தான் நம் வாழ்வும், உருவாவதும் மறைவதும் இயற்கையாய் நடப்பது என்றுணர்ந்து, தாம் பிறந்த பிறப்பில் நல்ல அறச் செயல்கள் செய்து, அதனால் இந்தப் பிறவியில் ஏற்படும் தடுமாற்றத்தில் இருந்த நீங்கப் பாடுபடுபவரே மெய்யறிவாளர், என்றழைக்கின்றார் இந்த நாலடியாரை இயற்றிய புலவர்.

பாடல்: 
படுமழை மொக்குகளின் பல்காலும் தோன்றிக்
கெடுமிதோர் யாக்கையென் றெண்ணித் - தடுமாற்றம்
தீர்ப்பேம்யாம் என்றுணரும் திண்ணறி வாளரை
நேர்ப்பார்யார் நீணிலத்தின் மேல்.

பொருளறிந்து படிக்க சொல் பிரித்த பாடல் :

'படு மழை மொக்குளின் பல் காலும் தோன்றி,
கெடும், இது ஓர் யாக்கை' என்று எண்ணி, 'தடுமாற்றம்
தீர்ப்பேம் யாம்' என்று உணரும் திண் அறிவாளரை
நேர்ப்பார் யார், நீள் நிலத்தின்மேல்?

அருஞ்சொற்பொருள்:

மொக்கு - நீர்க் குமிழி
யாக்கை - உடல்
திண் அறிவாளர் - மெய் அறிவாளர்
நேர்ப்பார் - சமமானவர், ஒப்பானவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக