செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 21



அந்த இடம் குறிஞ்சி நிலப் பரப்பைச் சார்ந்தது. அங்கங்கே மலைத்தொடர்கள். பல மலைகளின் சிகரங்கள் மேகங்களோடு உரையாடின. அந்த மலைகளுக்கெல்லாம் உச்சியில் அழகுடன் தவழ்ந்து வந்தது அந்த வெண்ணிலா.

ஆகாயத்தில் நிலவிய அந்தக் காட்சியைப் போல் நிலத்திலும் ஒரு நிகழ்வு நடந்தது. நிலத்தில் பல மக்கள் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். அந்த வேலைகளையும் நாட்டையும் பார்வையிட ஊர்வலம் வந்தார் மன்னர். அவ்வாறு வளம் வருகையில் அவர் யானை மீது ஏறி, அவரை வெயில் மழையில் இருந்து காப்பாற்ற, அவருடைய சேவகர்கள் அவருக்கு பெரிய குடை பிடித்து வந்தனர். இவ்வாறு அவர் வளம் வந்தது மேற்கண்ட காட்சியில் மலைகளுக்கெல்லாம் மேலே வந்த நிலவைப் போன்று இருந்தது.

அப்படி உயரத்தில் வலம் வந்த மன்னரும் மண்ணோடு மண்ணாக மாறுவது என்பது நிச்சயம். வாழும்பொழுது நாம் எவ்வளவு உயர் பதவியில் உயர் நிலையில் இருந்தாலும் நாம் அனைவரும் ஒரு நாள் இந்த இயற்கையோடு இணைவது தவிர்க்க முடியாதது.

உட்கருத்து: வாழ்க்கை என்பது நிலை அல்ல. வாழும் காலத்தில் நல்ல அறச்செயல்கள் செய்வோமாக.

பாடல்:
மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்
தலைமிசைக் கொண்ட குடையர் - நிலமிசைத்
துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட்ட டாரல்லால்
எஞ்சினார் இவ்வுலகத் தில்.


அருஞ்சொற்பொருள்:

மலைமிசை - மலையின் உச்சியில்
துஞ்சினார் - இறந்தார் என்பதற்கான மங்கல வழக்குச்சொல்
எஞ்சினார் - தப்பித்தார்


    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக