வியாழன், 5 பிப்ரவரி, 2015

நாளும் ஒரு ‪நாலடியார்‬: பாடல் 6


நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும் நடக்கும் பொழுது இசை இணைந்திருக்கும். குழந்தை பிறக்கும் முன்னரே பாடல் பாடும் நம் அன்னையர், பிறந்த பின் தாலாட்டு, சிறாராக விளையாடும் பொழுது விளையாட்டுப்பாடல், திருமண நிகழ்வின் போதும் இசை மற்றும் பாடல் என்று தொடரும். இசைக்கு கை கொடுப்பதோடு முரசு, முழவு மற்றும் பறைக் கருவிகள் நடக்கும் நிகழ்வினை ஊராருக்குத் தெரிவிக்கவும் பயன்பட்டது. இவ்வாறு பயன்படுத்தப் பட்டது தான் தண்ணம் என்னும் பறைக்கருவி. இக்கருவியினை ஒருவர் காலமான பின் அடித்து, காலமான செய்தியை தெரிவிப்பர். இதன் குறிப்பு நாம் இன்று பார்க்கும் நாலடியார் பாடலில் எடுத்தாளப் பட்டுள்ளது.
அமெரிக்க நாட்டில் ஒரு சொலவடை அதிகம் சொல்லுவர்: "நிலையற்ற இவ்வுலகில் நிலையானவை வரியும் மரணமும் தான்". உண்மை தான் எல்லாவற்றையும் நாம் சரி செய்துவிடலாம். அல்லது தப்பித்து விடலாம். ஆனால் வரிகளில் இருந்தும் நமக்கு நிகழப்போகும் மரணத்தில் இருந்தும் தப்பிக்க முடியாது. நமக்கான நேரம் முடியும்பொழுது கூற்றுவன் நம்மை அழைத்துச் சென்று விடுவான். அதனால் பெருமை தரக் கூடிய செல்வத்தை தம் தேவைக்கு அதிகமாக வைத்திருக்கும் செல்வந்தர்களே, உங்கள் மிகுதிச் செல்வத்தை மற்றவருக்கு காலம் தாழ்த்தாமல் இன்றே கொடுத்து உதவுங்கள்.
இக்கருத்தைத் தான் நாலடியார் பாடல் 6 நமக்குக் கூறுகிறது.
நாலடியார் ஒரு தொகுப்பு நூல் என்று கூறுவர். அதற்கு சிறு சான்றாக சென்ற பாடலும் இந்தப் பாடலும் அமைந்துள்ளது. சென்ற பாடலில் கூற்றுவனிடம் தப்பிபதற்கு மற்றவர்களுக்கு கொடுங்கள் என்று சொல்லப்பட்டது. இந்தப் பாடலில், "கூற்றுவனிடம் இருந்து தப்பிப்பது என்பது இயலாது. நம் தேவைக்கும் அதிகமாக நாம் திரட்டிய செல்வத்தை மற்றவருக்கு கொடுத்து உதவுங்கள்" என்று சொல்லப்பட்டுள்ளது. காரணம் என்னவென்றாலும் பரவாயில்லை.. நாம் செய்ய வேண்டிய காரியம் இது தான்: நமக்குள்ள சிறிய காலத்தில் நம்மால் ஆன உதவி மற்றும் நற்செயல்களை மற்றவருக்குச் செய்வோம்.

பாடல் 6:
இழைத்தநாள் எல்லை இகவா; பிழைதொரீஇக்
கூற்றம் குதித்துய்ந்தார் ஈங்கில்லை; - ஆற்றப்
பெரும்பொருள் வைத்தீர் வழங்குமின், நாளைத்
தழீஇம்தழீஇம் தண்ணம் படும்.
அருஞ்சொற்பொருள் :
இழைத்த - உண்டாக்கிய
இகவா - கடக்க மாட்டாது
தழீஇம் - ஓசைக் குறிப்பு
தண்ணம் - காலமானவுடன் ஒலிக்கப் படும் பறை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக