வியாழன், 5 பிப்ரவரி, 2015

நாளும் ஒரு ‪‎நாலடியார்‬ : பாடல் 7


நாம் பிறந்த இந்த பிறப்பு எப்பொழுது பிறப்பாக கருதப்படும்? நாம் நல்ல முறையில் கல்வி கற்று உயரும் பொழுதா? அல்லது நல்ல தொழில் செய்து உயரும் பொழுதா? நாம் நம் திறமையினால் நன்றாக பேசியோ அல்லது எழுதியோ அல்லது நடித்தோ மற்றவர்களை மகிழ்ச்சிப் படுத்தும் பொழுதா? அல்லது கலை பல கற்று படைக்கும் பொழுதா?
நம் காலம் நகர்ந்து கொண்டிருக்கிறது. நம் காலம் நகர்வதற்கான அறிகுறிகளை நமக்குச் சொல்வது அன்றாடம் கிழக்கில் உதித்து மேற்கில் மறையும் பகலவன் தான். அதனால் தானோ நம் முன்னோர்கள் எமன் அளப்பதற்கு படியாக கதிரவன் அமைவதாகக் கருதினர்? நாம் காணும் கதிரவன் உதிக்கும் நாட்கள் கூடக் கூட நமக்கான காலம் குறைகின்றது. இதனை அன்றுமுதல் இன்றுவரை அனைவரும் அறிந்ததே. அதனால் அதிகமாக தருமத்தை நாம் செய்ய வேண்டும். பொருட்செல்வத்தை செலவழித்து அருட்செல்வத்தை சேர்க்கவேண்டும். அவ்வாறு அருளடையவர் ஆனால் தான் நம்முடைய இந்தப் பிறப்பு பிறப்பாகக் கருதப்படும். இல்லையெனில் நாம் பிறந்ததற்கும் பிறக்காமல் இருப்பதற்கும் வேறுபாடில்லை.
இக்கருத்தை விளக்கும் பாடல்:
தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும்
கூற்றம் அளந்துநும் நாளுண்ணும்; - ஆற்ற
அறஞ்செய் தருளுடையீர் ஆகுமின்; யாரும்
பிறந்தும் பிறவாதா ரில்
அருஞ்சொற்பொருள்
தோற்றம்சால் - ஒளி மிகுந்த
நாழி - அளப்பதற்கு பயன்படும் படி
வைகலும் - நாள்தோறும்
கூற்றம் - எமன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக