திங்கள், 16 பிப்ரவரி, 2015

நாளும் ஒரு நாலடியார்: பாடல் 18


நீண்ட நாட்களுக்குப் பிறகு இரு நண்பர்கள் இணைந்தார்கள். பல ஆண்டுகள் கடந்த காரணத்தால் பல வினாக்கள் அவர்கள் மனதினில். என்ன வயது ஆகின்றது? நேரம் பறந்து விட்டதே! பற்கள் எத்தனை மீதம் இருக்கின்றது? மீதம் இருக்கும் பற்கள் எப்படி, எந்தத் தன்மையில் இருக்கின்றன? எவ்வளவு சாப்பிட முடிகிறது? இரு கவளமாவது சாப்பிட முடிகிறதா? இப்படி அனைத்து வினாக்களையும் அவர்களுக்குள் வரிசையாக பரிமாரிக்கொண்டார்கள். இவ்வினாக்களை நாம் உற்று நோக்கினால் ஓர் ஒற்றுமை வெளிப்படும். இவை அனைத்துமே உடல் நிலை பற்றியது.

இப்பொழுது வேறு ஒரு காட்சியைப் பார்க்கலாம். இதில் அறிவு மிகுந்த பெரியோர்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கின்றனர். அவர்கள் தங்களுக்குள் கேட்டுக் கொண்ட வினாக்கள் அனைத்துமே ஈதல் மற்றும் புகழ் பெற வாழ்தல் குறித்து இருந்தன. எந்த வினாவுமே உடம்பைக் குறித்து இல்லை. ஏன் என்றால் அறிவுடைய அவர்கள், உடல் நிலையற்றது, அது காலம் செல்லச் செல்ல மாறும் என்பதை நன்கு உணர்ந்திருந்தனர். அதனால் அதனைப்பற்றி சிந்திக்காமல் நல்ல அறச்செயல்கள் பற்றி சிந்திக்கிறார்கள்.

பாடல்:
பருவம் எனைத்துள பல்லின்பால் ஏனை
இருசிகையும் உண்டீரோ என்று - வரிசையால்
உண்ணாட்டம் கொள்ளப் படுதலால் யாக்கைக்கோள்
எண்ணார் அறிவுடை யார்.

அருஞ்சொற்பொருள்:

பருவம் - வயது
எனைத்து - எவ்வளவு
பால் - தன்மை
சிகை - பிடி, கவளம்
உண்ணாட்டம் - உள் நாட்டம் - உள்ளத்தில் ஆராயப்படுதல்
யாக்கை - உடம்பு
கோள் - தன்மை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக