வியாழன், 5 பிப்ரவரி, 2015

நாளும் ஒரு ‪நாலடியார்‬: பாடல் 9

அது ஒரு பெரிய வீடு. அவ்வீட்டில் உள்ள பெரியவரை நிறைய பேர் பார்த்தது கிடயாது. அதனால் மனிதர்கள் பலர் அந்த வீட்டைக் கடந்து போனாலும் அவரிடம் பேசுவதோ அல்லது அவரைப் பற்றி பேசுவதோ பார்த்திராத ஒன்றாகும். திடீரென ஒரு நாள் அங்கு வந்த பெரியவர் ஒருவர் அருகில் இருந்தவர்களிடம் "ஐயோ, இவ்வீட்டில் வாழ்பவர் எல்லாவற்றையும் இழந்தவர். அவர் ஒரு வறியர் " என்று உரக்கக் கூறினார். அருகில் இருந்தவர்களோ "அவ்வீட்டில் வாழும் நபரைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே" என்று ஆச்சரியத்துடன் கேட்டனர்.
அதற்கு அந்தப் பெரியவர் " வீட்டின் உள்ளே இருப்பவர் ஒழுங்காக நல்ல உணவை அவர் உண்டதில்லை. மற்றவரிடம் நன் மதிப்பை பெற்றதில்லை. நல்ல செயல் செய்து புகழ் அடைந்ததும் இல்லை. தனக்கு நெருங்கிய, பெறுவதற்கு அரிய நண்பர்கள் மற்றும் உறவினர்களின் துன்பத்தை நீக்கியதும் இல்லை. இரந்து தன்னிடம் வந்து பிச்சை கேட்பவருக்கும் நிதி வழங்குவது இல்லை. இத்தனை வகை "இல்லாமை" கொண்டு அவர் செல்வம் மட்டும் இருந்தாலும், செல்வம் இல்லதவராகத்தானே கருதப் படுவார்?" என்று கூறியதும், அனைவரும் ஆமோதித்தனர்.
இக்கருத்தை விளக்கும் நாலடியார் பாடல்:
உண்ணான் ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான்
துன்னருங் கேளிர் துயர்களையான் - கொன்னே
வழங்கான் பொருள்காத் திருப்பானேல், அ ஆ
இழந்தான்என் றெண்ணப் படம்
அருஞ்சொற்பொருள்
ஒளி - மதிப்பு
துன் அரும் - சேருதற்கு அரிய
கொன்னே - வீணாக ; கொண்ணே பொருள் காத்திருப்பானேல் என்று கூட்டுக.
அஆ - ஐயோ


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக