ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

நாளும் ஒரு நாலடியார்: பாடல் 26

நேரம் சற்று குறைவாகவே இருப்பதால் அவர் விரைவாக அலுவலகம் புறப்பட்டுக் கொண்டிருந்தார் . கண்ணாடி முன் நிற்கும் பொழுதுதான் தெரிந்தது அந்தக் கீறல். தன நெற்றியில் எவ்வாறு அந்தக் கீறல் எப்படி வந்தது? விரைவாக புறப்பட வேண்டிய நேரம் என்றாலும் அவருடைய மனது ஏனோ அக்கீறல் வந்ததற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று சிந்தித்த வண்ணம் இருந்தது. சிந்தனை அப்படி ஓடினாலும் ஒருவழியாக புறப்பட்டு அலுவலகத்திற்கு நடந்து சென்றார். அப்போது அருகில் வேகமாக வந்த வண்டி அருகில் இருந்த நீரில் செல்ல தன் கால் பகுதியில் அந்தச் சகதி மிகுந்த நீர் பட, சிறிது சினம் கொண்டார்.

மேற்கண்ட நிகழ்வுகளில் அவர் சந்தித்தது, சிந்தித்தது போல், நாம் பல நிகழ்வுகளைப் பார்த்திருப்போம். நம் உடம்பினை என்றும் பேணிப் பாதுகாப்போம். எதுவரை நாம் இவ்வாறு பாதுகாக்கலாம்? தோல் பையால் ஆன இந்த உடம்பு பலவிதச் செயல்களைச் செய்ய ஊட்டுவிக்கும் உயிர் இருக்கும் வரைப் பாதுகாக்க இயலும். உயிர் ஆகிய அந்தக் கூத்தன் நம் உடலைவிட்டு நீங்கிவிட்டால் நம் உடம்பை நாரில் கட்டி இழுத்தாலும், நன்றாக தூய்மை செய்து இடுகாட்டுக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்தாலும், இந்த இடத்தில் வைக்கலாம், இந்த இடத்தில் வைக்கக் கூடாது என்று பாராமல் எவ்விடத்தில் போட்டாலும், கண்ட இடத்தில் போட்டதனால் மற்றவர்கள் தூற்றினாலும் நமக்கு பெருமையோ சிறுமையோ இல்லை.

உட்கருத்து: உயிர் நீங்கிய பின் உடம்பின் தன்மை போற்றப்படாததால், நம் உயிர் இருக்கும் பொது உடலை மட்டும் பாதுகாக்காமல் நம் உயிரைப் பாதுகாக்க அறச் செயல்கள் செய்வோமாக.

பாடல்:

நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்ந் தடக்கிலென்
பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்;
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும்
கூத்தன் புறப்பட்டக் கால்.

பொருளறிந்து படிக்க சொல் பிரித்த பாடல்:

நார்த் தொடுத்து ஈர்க்கில் என்? நன்று ஆய்ந்து அடக்கில் என்?
பார்த்துழிப் பெய்யில் என்? பல்லோர் பழிக்கில் என்?-
தோல் பையுள் நின்று, தொழில் அறச் செய்து ஊட்டும்
கூத்தன் புறப்பட்டக்கால்.

அருஞ்சொற்பொருள்:

ஈர்க்கில் - ஈர்த்தல் - இழுக்கப்படுதல்
ஆய்ந்து - தூய்மை செய்து
உழி - இடம்
பெய்யில் - பெய்தால் - வைத்தல்
கூத்தன் - இங்கு உயிரைக் குறிக்கின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக