சனி, 21 பிப்ரவரி, 2015

நாளும் ஒரு நாலடியார்: பாடல் 25


நாம் நம்முடைய அன்றாட வாழ்வினைத் தொடர்கின்றோம். தொழில் நிமித்தமாக இருக்கட்டும் அல்லது இல்லத்தின் நிமித்தமாக இருக்கட்டும் நாளை மீதுள்ள நம்பிக்கை என்பது தான் நமக்கு கை கொடுக்கும் தோழமை. நாளும் பொழுதும் இவ்வாறு நகரும் பொழுது அவ்வப்போது நமக்கு ஏதோ ஒரு நிகழ்வு நம்மை ஆழ்ந்த சிந்தனைக்கு இழுத்துச் செல்லும். நாம் நல்ல பாதையில் சென்று கொண்டிருக்கிறோமா? நல்ல செயல்கள் செய்கிறோமா? என்று வினாக்கள் நம் மனதில் எழும்.

இப்படி நமக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கும் ஒரு நிகழ்வு ஒருவர் இயற்கை எய்திய இல்லத்தில் ஒலிக்கும் பறை ஒலி. "டொன் ,டொன், டொடு" என்று ஒலிக்கும் அந்தப் பறை என்ன எச்சரிக்கை விடுக்கிறது? ஊரும் உறவினரும் சேர்ந்து, அலறி அழுது கலமானவரின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்வதைக் கண்டும், திருமணம் புரிந்து அனைத்து இன்பங்களும் என்றும் "உண்டு, உண்டு, உண்டு" என்று சிற்றின்பச் செயல்கள் மட்டும் புரிந்து இவ்வுலக வாழ்வினை வாழ்பவருக்கு, இவ்வுலகில் இருந்து பிரிவது இயற்கையே என்று எச்சரிக்கை விடும்.

உட்கருத்து: சிறிது காலம் வசிக்கும் நாம் சிற்றின்பம் மட்டுமன்றி அறச் செயல்களும் செய்வோமாக.

பாடல் :

கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப்
பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் - மணங் கொண்டீன்
டுண்டுண்டுண் டென்னும் உணர்வினாற் சாற்றுமே
டொண்டொண்டொ டென்னும் பறை.

பொருளறிந்து படிக்க சொல் பிரித்த பாடல்:

கணம் கொண்டு சுற்றத்தார் கல்லென்று அலற,
பிணம் கொண்டு காட்டு உய்ப்பார்க் கண்டும், மணம் கொண்டு, ஈண்டு,
'உண்டு, உண்டு, உண்டு' என்னும் உணர்வினான்-சாற்றுமே,
'டொண் டொண் டொடு' என்னும் பறை.

அருஞ்சொற்பொருள்:

கணம் - கூட்டம்
ஈண்டு - இவ்வுலகில்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக