திங்கள், 16 பிப்ரவரி, 2015

நாளும் ஒரு ‪‎நாலடியார்‬: பாடல் 11


இளமைக் காலம் என்பது ஓர் அரிய பருவம். அருமையான பருவம். இப்பருவத்தில் நம் சக்தி நிலை அதிகமாக இருக்கும். "இளங்கன்று பயமறியாது"என்று கூறுவது போல் இப்பருவத்தில் எதனைப்பற்றியும் கவலைப்படாமல் புது முயற்சிகளை, புது செயல்களை செய்யத் தயக்கம் இருக்காது. இதனை நன்கு உணர்ந்த நல் அறிவாற்றல் கொண்டவர்கள், இளமைப்பருவ இன்பங்களில் நேரத்தை செலவழிக்காமல் நல்ல செயல்களுக்கு நேரத்தை ஒதுக்குவர். அக்காலத்தில் பல நற்செயல்களுள் ஒன்றாக கருதப்பட்டது துறவறம் ஆகும்.
இதனை உணராத மக்கள் இளமைக் காலத்தில் இன்பம் எனக்கருதி அதற்கு நேரத்தை ஒதுக்கும் பொழுது அவர்கள் எதனையும் சாதிக்காமல் வாழ்வதால் ஒரு மனிதரின் பருவ நிலைகளைக் கடந்து வயதான காலத்தில் கோல் ஊன்றி நடப்பதைக் காட்டிலும் வேறு எதுவும் இவ்வாழ்க்கையில் நிகழ்த்தி இருக்கமாட்டார்கள்.
இங்கு உட்பொருளாக கூறப்பட்டது: இளமைக்காலம் அரிய பருவம். அது நிரந்தரம் அல்ல. அதனால் அப்பருவத்தில் நற்செயல் செய்வதாகும்.

பாடல்: 

நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்
குழவி யிடத்தே துறந்தார் ; - புரைதீரா
மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல் ஊன்றி
இன்னாங் கெழுந்திருப் பார்.

அருஞ்சொற்பொருள்:
குழவி - குழந்தை. இங்கு இளமைக்காலத்தைக் குறிக்கிறது.
புரைதீரா - குற்றம் நீங்குதல் இல்லாத
மன்னா - நிலை இல்லாத
இன்னாங்கு-பட்டாங்கு என்ற சொல்லுக்கு இணையானது. இவ்வுலகில் என்று பொருள் கொள்ளலாம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக