வியாழன், 5 பிப்ரவரி, 2015

நாளும் ஒரு ‪நாலடியார்‬ : பாடல் - 3



வீரம் மிகுந்த மன்னன் ஒருவன் இருந்தான். அவன் படைவீரர்களை நல்ல முறையில் நிர்வகித்து போர்கள் பலவற்றில் வென்றதானால் அவன் யானையின் பிடரில் அமர்ந்து வலம் வந்தான். அவன் யானையின் பிடரில் அமர்ந்ததனால் யானை பிடர் ஒளி விளங்கித் திகழ்ந்தது. அவன் அவ்வாறு வலம் வரும்பொழுது சேவகர்கள் அவனுக்கு குடை பிடித்து வருவர். இவ்வாறு அவன் படைக்கு நல்ல தலைவனாய்த் திகழ்ந்தான்.
அவ்வாறு இருந்த மன்னனுக்கு நல்வினை போய் தீவினை வந்தால் என்ன நடக்கும்? நிலை மாறு படும். அவனை விட வீரத்தில் சிறந்த மன்னன் அவனை வெல்வான். வென்ற பின் தோல்வியுற்ற மன்னனின் செல்வம் பறித்துக்கொள்ளப் படும். செல்வம் மட்டுமல்ல, தோற்ற மன்னனின் மனைவியையும் வென்ற மன்னன் கொண்டு போக நேரிடும். அனைத்தும் கொண்டிருந்த மன்னன் அனைத்தையும் இழப்பது என்பது நடக்கக் கூடிய ஒன்று தான். இதில் வியப்பில்லை.
நிலையாமையை இவ்வாறு விளக்கும் பாடல் உட் பொருளாக நமக்கு உணர்த்துவது: செல்வம் இருக்கும் பொழுது மற்றவர்களுக்கு பயனுள்ள செயல்களை செய்ய வேண்டும்.
பாடல்:
யானை யெருத்தம் பொலியக் குடைநிழற்கீழ்ச்
சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - ஏனை
வினைஉலப்ப வேறாகி வீழ்வர்தாம் கொண்ட
மனையாளை மாற்றார் கொள
அருஞ்சொற்பொருள்:
எருத்தம்: பிடர், கழுத்தின் பின் புறம்
பொலிய : ஒளி விளங்க
உலப்ப - கெடுக்க ; இப்பாடலில் வினை என்பது தீவினையைக் குறிக்கிறது. அதனால் வினை உலப்ப என்று கூறப்பட்டது.


1 கருத்து: