திங்கள், 16 பிப்ரவரி, 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 17


பனி படர்ந்து அதனால் குளிர் காற்று வீசி, குளிர்ந்தது அந்த சோலை. கண்களைக் கவரும் மலர்களைக் கொண்டு பூத்துக் குலுங்கின அந்த மரங்கள். மலர்களைத் தொடர்ந்து அம்மரங்கள் காய்கள் மற்றும் கனிகளைத் தாங்கித் திகழ்ந்தன. பின்னர் இலையுதிர் காலம் வந்து, பூத்துக் குலுங்கிய மரங்களா இவை என்று வியக்க வைக்கும் அளவுக்கு காட்சி மாறியது.

மேற்கண்ட காட்சியை உவமையாக விளக்கிவிட்டு நம் நாலடியார்ப் புலவர் இன்னொரு காட்சியைப் பாடுகிறார். அவள் கண்களைக் கண்டால் மின்னல் பாய்ச்சுவது போல் இருக்கும். அதன் கூர்மையின் காரணமாக அவளை வேல் கண்ணள் என்று வர்ணித்திருக்கிறார். அவ்வாறு வேல் போன்ற கண்களை உடையவள் தனது ஊன்று கோலையும், பாதையையும் பார்த்துக் கொண்டு குனிந்து நடக்கும் நிலை அடைகின்றாள். வேல் கண்ணளாக இருந்தவள் கோல் கண்னளாக மாறிவிடுவாள். அதனால் நிலையற்ற இளமைப் பருவத்தில் இருக்கும் பெண்ணின் மீது ஆசைப் பட்டு அறச் செயல்களை தவர் விடாதீர்கள் என்று உணர்த்துகிறார் இந்த பாடலை எழுதிய புலவர்.

பாடல்:
பனிபடு சோலைப் பயன்மர மெல்லாம்
கனியுதிர்ந்து வீழ்ந்தற் றிளமை - நனிபெரிதும்
வேல்கண்ணள் என்றிவளை வெ ஃகன்மின் மற்றிவளும்
கோல்கண்ண ளாகும் குனிந்து

அருஞ்சொற்பொருள்:

நனி - சிறந்த
வெ ஃகன்மின் - ஆசைப் படாதீர்கள்
கோல்கண்ணள் - ஊன்று கோலை பார்க்கும் கண்களை உடையவள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக