திங்கள், 16 பிப்ரவரி, 2015

நாளும் ஒரு நாலடியார்: பாடல் 14


வயதான ஒரு மூதாட்டி நடந்து வந்தார். அவர் கூன் விழுந்த முதுகுடன் குனிந்து நடந்து வந்தார். மிகவும் தளர்ச்சியுடன் திகழ்ந்த அவர் நடந்து வரும் பொழுது அவரை அறியாமலேயே அவர் தலை நடுங்கியது. மூன்றாம் காலாக அவரது ஊன்றுகோல் அவர் நடப்பதற்கு உதவியது. இவ்வாறு உடல் தளர்ந்து அவரது வாழ்நாள் குறைந்து இறக்கும் காலத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்.

இவ்வாறு இன்று இருக்கும் மூதாட்டி, இவரது தாயார் கோல் ஊன்றி உடல் தளர்ந்திருக்கும் பொழுது எப்படி இருந்தார்? இவரைக் கண்டவரைக் கவர்ந்து இவர் மேல் மோகத்தைக் கொண்ட மாந்தருக்கு வருத்தம் ஏற்படுத்தக் கூடிய அழகைக் கொண்டிருந்தார். அழகு சரி. அது என்ன வருத்தம் கொடுக்கக் கூடிய அழகு? உறுதியான அறிவு இல்லா மாந்தர், அழகில் மயங்கி அதனால் அறச்செயல்கள் செய்யத் தவறி, அதன் விளைவாக வருத்தம் ஏற்படுதலால், வருத்தம் உண்டாக்கக்கூடிய அழகு என்று வர்ணித்தார்.

இப்பாடலின் உட்பொருள்: கவரக்கூடிய அழகும் காலம் செல்லச் செல்ல மாறிவிடும். அதனால் இளமையில் மாறாத இன்பமளிக்கும் அறச்செயல்கள் செய்ய வேண்டும்.

பாடல்:

தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா
வீழா இறக்கும் இவள்மாட்டும் - காழ்இலா
மம்மர்கொள் மாந்தர்க் கணங்காகும் தன்கைக்கோல்
அம்மனைக்கோல் ஆகிய ஞான்று.

அருஞ்சொற்பொருள்:

தாழா - குனிந்து
வீழா - வீழ்ந்து
காழ்இலா - உறுதியான அறிவு இல்லாத
மம்மர்கொள் - காம மயக்கத்தைக் கொண்ட
அணங்கு - வருந்துதல்
அம்மனைக்கோல் - அவள் தாயின் கோல்
ஞான்று - நாள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக