வியாழன், 5 பிப்ரவரி, 2015

நாளும் ஒரு ‪‎நாலடியார்‬: பாடல் 5


ஒரு இளைஞர். கல்லூரிப் படிப்பு முடிந்து தொழில் துவங்கி அந்தத் தொழிலும் நல்ல முறையில் வளர்ந்தது. அதனால் அவருக்கு பொருட்செல்வம் பெருகத் துவங்கியது. அவ்வாறு பெற்ற பொருளை என்ன செய்யலாம்? எவ்வாறு பயன் படுத்தலாம்? அச்செல்வத்தை பிறகு பயன்படுத்தலாம் என்று சேர்த்து வைக்கலாமா? அதனால் பயன் உண்டாகுமா?
பின்னொரு காலத்திற்கு என்று வைக்காமல் காலம் தாழ்த்தாமல் உடனே மற்றவருக்கு கொடுத்து உதவுதலும் ஒரு வழி தானே? அவ்வாறு உதவினால் என்ன நடக்கும் என்று நம் முன்னோர்நம்பினர்? உதவும் அன்பர்கள் ஒரு கொடிய வழியில் பயணிப்பதில் இருந்து தப்பிப்பார்கள் என்றனர். அது என்ன கொடிய வழி? அங்கு பயப்படும் அளவுக்கு என்ன பயணம்? பாலை நிலத்தில் இருக்கும் அவ்வழியில் ஏழை செல்வந்தர், இளையோர் மூத்தோர், ஆண் பெண் என்று எவ்வகை குழுவினருக்கும் பாரபட்சம் இல்லாமல் நடுவு நிலையுடன் திகழும் எமன் தனது கயிற்றில் கட்டி அழைத்துச் செல்வது தான் அப்பயணம். அப்பயணத்தின் கொடுமையில் இருந்து தப்பிக்க காலம் தாழ்த்தாமல் கிடைத்த செல்வத்தை மற்றவருக்கு கொடுத்து அறவழியில் செலவிடுக என்றனர்.
இதனை விளக்கும் பாடல் தான் நாலடியார் பாடல் 5:
என்னானும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால்
பின்னாவ தென்று பிடித்திரா - முன்னே
கொடுத்தார் உயப்போவர் கோடில்தீக் கூற்றம்
தொடுத்தாறு செல்லும் சுரம்.
அருஞ்சொற்பொருள்:
என்னானும்: ஏதாவது
உற: சேர
உயப்போவர் : தப்பிப்போவர்
கோடில் : கோடு + இல் ; கோணுதல் இல்லாத ; நடுவு நிலைமை உள்ள
கூற்றம் : எமன்
ஆறு : பாதை, வழி
சுரம் - பாலை நிலம்


2 கருத்துகள்:

  1. நல்லாயிருக்கு

    இது என் கடை http://vriddhachalamonline.blogspot.in/

    பதிலளிநீக்கு
  2. நன்றி திரு செந்தில்குமார். உங்கள் பக்கத்தை படிக்க ஆவலாய் உள்ளேன்.

    பதிலளிநீக்கு