வியாழன், 5 பிப்ரவரி, 2015

நாளும் ஒரு ‪நாலடியார்‬ : பாடல் 2

செல்வத்தின் தன்மை என்ன? செல்வத்தின் இயல்பு நடுவு நிலை என்றால் நம்ப முடிகிறதா?
சக்கரத்தில் உள்ள ஆரம் ஒரு நொடி மேலிடத்தில் இருக்கும். மறு நொடி கீழே இருக்கும். அது போல் இன்று ஒருவரிடம் இருக்கும் செல்வம் நாளை மற்றவரிடம் இருக்கும். இவ்வாறு ஒருவரிடம் இருந்து மற்றவரிடம் செல்வதால் செல்வத்தின் நிலையாமையை உணர்த்தி செல்வம் நடுவு நிலை கொண்டது என்றனர் நம் முன்னோர்.
ஒரு ஊரில் பெருஞ்செல்வர் வாழ்ந்து வந்தார். அவருக்கு பெரிய வயல் இருந்தது. அவ்வயலில் எருமைக் கடாக்கள் பல உழைத்து அதனால் அவருக்க நல்ல விளைச்சல். செல்வம் மற்றும் வளம் கொழிக்கும் அவர் என்ன செய்யலாம்? செல்வம் அவரிடம் அல்லது அவரது குடும்பத்தினரிடமே இருக்கும் என்று உத்தரவாதம் இருந்தால் அவர் என்ன செய்வார்? நாம் மேற் சொன்னது போல் இன்று செல்வம் உங்களுக்கு உண்டு, ஆனால் நாளை இருக்காது என்றால் என்ன செய்வார்? நம்மிடமிருந்து செல்வம் விலகாமல் இருக்கும் என்ற நம்பிக்கை தொடருமானால் செல்வத்தைப் பகிர்வது கடினமாகும். இன்று இருக்கும் நாளை இருக்காது என்றால் இருக்கும் போது பகிர்தல் எளிதாகும்.
இதனைத் தான் இரண்டாம் நாலடியார் பாடல் நமக்கு விளக்குகிறது. நல்ல விளைச்சலோடு செல்வம் கொழிக்க விளங்கும் செல்வந்தர் செல்வம் அவரிடம் இருக்கும்பொழுது பலரோடு சேர்ந்து தனது விளைச்சலைப் பகிர்ந்த உண்ண வேண்டும் என்று வேண்டுகிறது.
பாடல்:
துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க;
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்.
அருஞ்சொற்பொருள்:
துகள்தீர் : குற்றமற்ற
பகடு: எருமைக் கடா
அகடு உற: நடுவு நிலைமை பொருந்த
சகடக்கால்: வண்டிச்சக்கரம்


1 கருத்து: