வெள்ளி, 27 மார்ச், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 53

அந்த வாரம் வேலைப் பளு காரணமாக அவளின் மன அழுத்தம் சற்றே அதிகமானது. அதனைச் சரி கட்ட, வார இறுதியில் எந்த வேலையும் செய்வதில்லை என்ற உறுதியோடு எழுந்தாள். காலைக் கடன்களை முடித்து கடற்கரை சென்று காலார நடந்தாள். அந்த அலையின் ஓசை அவளுடைய மனதை இதமாக வருட, அவள் மனதில் சிந்தனைகள் வலம் வந்தன. அட நேற்று போல் இருக்கிறது,எவ்வளவோ நிகழ்வுகள் முடிந்தன! ஆம் இந்த காலச் சக்கரத்தில் பல நிகழ்வுகள்.. ஆனால் நிலைப்பது எது? எப்பொழுதும் இவ்வாறு வினா எழுந்தால், அவள் மனதில் ஒரு குறள் வந்து நிற்கும். ஆனால் அன்று ஒரு நாலடியார் நினைவில் வந்தது.



இனிமையான இல் வாழ்வு, துடிதுடிப்பான இளமைக் காலம், அழகும் வனப்பும் மிகுந்த நம் உடம்பு, நம் சொல்லிய சொல்லை மற்றவர்கள் மேன்மையான சொல்லாகக் கொண்ட நாட்கள், உழைத்து சேர்த்த செல்வம், நன்றாக உணவுண்டு, நற்பயிற்சி கொண்டு பெற்ற வலிமை என்று இவை அனைத்துமே நிலையாக நிற்பது இல்லை. இதனைப் புரிந்துகொண்ட மெய்யறிவு கண்ட மேன் மக்கள் காலத்தை நீடிக்காமல், தாம் உய்வதற்காக பற்றுகளைத் துறந்து நற்செயல்கள் செய்து வாழ்வர்.


பாடல்:

இல்லம் இளமை எழில்வனப்பு மீக்கூற்றம்
செல்வம் வலிஎன் றிவையெல்லாம் - மெல்ல
நிலையாமை கண்டு நெடியார் துறப்பர்
தலையாயார் தாம் உய்யக் கொண்டு.

பதம் பிரித்த பாடல்

இல்லம், இளமை, எழில், வனப்பு, மீக்கூற்றம்,
செல்வம், வலி, என்று இவை எல்லாம், மெல்ல,
நிலையாமை கண்டு, நெடியார், துறப்பர்-
தலையாயார்-தாம் உய்யக் கொண்டு.

அருஞ்சொற்பொருள்

மீக்கூற்றம் - மென்மையான சொல் ; செல்வாக்குள்ள சொல்
வலி - வலிமை

நெடியார் - நீடிக்க மாட்டார்

2 கருத்துகள்: