வியாழன், 19 மார்ச், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 47

ஒரு குடம். அதில் ஒன்பது துவாரங்கள். அந்த ஒன்பது துவாரங்களின் வழியாக இவ்வுலகின் பொருள்களின் பரிமாற்றத்தால், அருவருக்கத் தக்க அழுக்குகள் அக்குடத்தினுள். அந்தக் குடத்தினுள் அவ்வழுக்குகள் அங்கும் இங்குமாக சிதறி அலை மோதுகின்றன. அக்குடத்தின் மேல் அழகான ஓர் உறை. அந்த உறையின் அழகினால் உள்ளே இருக்கும் அழுக்குகள் மறைவதில்லை. உடம்பினை இது போன்ற குடத்திற்கு ஒப்பிடுகிறார் இந்த நாலடியார்ப் புலவர்.


இளமையும் அழகும் பொருந்திய தோல் போர்த்திய ஒரு பெண்ணின் உடலைப் பார்த்து, அதனால் கண்களில் ஒளிபெருக, "இவள் பெரிய தோளை உடையவள். இவள் கவர்ச்சியான வளையல்கள் அணிந்தவள்" என்று அப்பெண்ணைப் பார்த்து மயங்குகின்ற மாந்தர் அறிவற்றவர்களே. ஏன் என்றால் எந்த உடம்பைப் பார்த்து மயங்கினார்களோ அந்த உடம்பினுள் அருவருக்கத் தக்க அழுக்குகள் அங்கும் இங்கும் அலை மோதும். 

உட்கருத்து : அறிவு மிகுந்த மாந்தர் உடம்பின் அழுக்கு நிலையை உணர்ந்து, உடம்பின் புற அழகினைப் போற்றாமல், அக அழகினைப் போற்றி அறம் செய்து வாழ்வார்கள். 

பாடல்: 

ஊறி உவர்த்தக்க ஒன்பதுவாய்ப்புலனும்
கோதிக் குழம்பலைக்கும் கும்பத்தைப் - பேதை
பெருந்தோளி பெய்வளாய் என்னுமீப் போர்த்த
கருந்தோலால் கண்விளக்கப் பட்டு.

பதம் பிரித்த பாடல் :

ஊறி, உவர்த்தக்க ஒன்பது வாய்ப் புலனும்
கோதிக் குழம்பு அலைக்கும் கும்பத்தை, பேதை,
'பெருந்தோளி! பெய்வளாய்!' என்னும்-மீப் போர்த்த
கருந் தோலால் கண் விளக்கப்பட்டு.

அருஞ்சொற்பொருள்:

உவர்த் தக்க - அருவருக்கத்தக்க 
கோதி - சிதறுதல்
கும்பம் - குடம், கரகம் - இங்கு உடம்பைக் குறித்தது 
பெருந்தோளி - பெரிய தோளை உடையவள் 
பெய்வளாய் - வளையல் இட்டவள் 
மீ - மேல் 
கருந் தோலால் - அழகிய தோலால் 


1 கருத்து: